விசாரணை கைதி உயிரிழப்பு வழக்கு டிச.10க்கு தள்ளிவைப்பு
ராமநாதபுரம்: பரமக்குடி போலீஸ் ஸ்டேஷனில் விசாரணைக் கைதி உயிரிழந்த வழக்கில் மாவட்ட முதன்மை நீதிமன்றம் டிச.10க்கு விசாரணையை தள்ளி வைத்தது. மதுரையை சேர்ந்த ராமானுஜன் மகன் வெங்கடேசன் 26. இவரை திருட்டு வழக்கு தொடர்பாக விசாரணைக்கு 2012 அக்.,2-ல் பரமக்குடி எமனேஸ்வரம் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்தனர். அவர் போலீஸ் ஸ்டேஷனில் இறந்தார். போலீசார் தாக்கியதில் இறந்ததாக உறவினர்கள் புகார் தெரிவித்தனர். வழக்குப்பதிவு செய்யப்பட்டு அப்போதைய எஸ்.ஐ., முனியசாமி உட்பட 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். வழக்கு சி.பி.சி.ஐ.டி., போலீசாருக்கு மாற்றப்பட்டது. எஸ்.ஐ., முனியசாமி ஓய்வு பெற்ற நிலையில் ஜாமினில் வந்தவர் உடல் நலக்குறைவால் இறந்தார். இவ்வழக்கில் ஏட்டுகள் பரமக்குடி ஞானசேகரன், மஞ்சூர் கிருஷ்ணவேல், ஆப்பநாடு கோதண்டராமன் ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கு மாவட்ட முதன்மை நீதிபதி மெகபூப் அலிகான் முன்னிலையில்நேற்று விசாரணைக்கு வந்தது. இதில் கோதண்டராமன், ஞானசேகரன், கிருஷ்ணவேல் ஆகியோர் ஆஜராகினர். நீதிபதி மெகபூப் அலிகான் வழக்கு விசாரணையை டிச.10க்கு தள்ளி வைத்தார்.