கடலில் நேரடியாக கலக்கும் கழிவுகள் அரிய வகை உயிரினங்களுக்கு ஆபத்து
தேவிபட்டினம்: தேவிபட்டினம் கடலில் கலந்து வரும் குடியிருப்பு பகுதி கழிவுகளால் அரிய வகை கடல் வாழ் உயிரினங்கள் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கிழக்குக் கடற்கரை பகுதியான தேவிபட்டினம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், பல ஆயிரக் கணக்கான நாட்டு படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனர். கிழக்கு கடற்கரைப் பகுதியில் குறிப்பிட்ட கடல் மைல் தொலைவில், பவளப்பாறைகள் அதிக அளவில் உள்ளன. இங்கு அரிய வகை கடல் வாழ் உயிரினங்களும் வசித்து வருகின்றன. தேவிபட்டினம் குடியிருப்பு பகுதிகளில் இருந்து வெளிவரும் கழிவுகள், கடலில் நேரடியாக கலக்கிறது. இதனால் ஏற்படும் மாசின் காரணமாக பவளப்பாறைகள் பாதிப்படைவதன் காரணமாக, அரியவகை கடல்வாழ் உயிரினங்களான கடல் பசு, கடல் குதிரை உள்ளிட்ட கடல் வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கம் பாதிக்கப்பட்டு, உயிரினங்கள் அழியும் நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் குடியிருப்பு கழிவுகள் நேரடியாக கடலில் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுப்பதுடன் அரிய வகை கடல்வாழ் உயிரினங்களை பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தினர்.