பரமக்குடி ஜீவா நகரில் எல்.பி.ஜி., தகன மேடை திறப்பது எப்போது? மயானங்களில் அடிப்படை வசதி இல்லை
பரமக்குடி; பரமக்குடி நகராட்சி ஜீவா நகரில் கட்டப்பட்ட எல்.பி.ஜி., தகன மேடை திறக்கப்படாத நிலையில் மயானங்களில் அடிப்படை வசதிகள் இல்லாததால் மக்கள் சிரமப்படுகின்றனர். பரமக்குடி நகராட்சியில் 36 வார்டுகள் இருக்கிறது. இங்கு ஒரு லட்சத்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். தொடர்ந்து அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும் சூழலில் எமனேஸ்வரம் மஞ்சள்பட்டணம் பகுதியில் எரிவாயு தகன மேடை உள்ளது. ஆனால் இங்கு அவ்வப்போது தகனம் மேடை பிரச்னையால் இறந்தவர்களை எரிக்க முடியாமல் சிரமம் அடைகின்றனர். இதனால் பழைய நிலையில் காக்கா தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் எரிக்கும் நிலை ஏற்படுகிறது. ஆனால் மயானங்களில் எந்த அடிப்படை வசதிகளும் இருப்பதில்லை. இதனால் இருளில் செல்வதுடன், தண்ணீர் தேவையும் உள்ளது. இந்நிலையில் நகர்புற மேம்பாட்டு திட்டம் 2023 --24 ஜீவா நகரில் எல்.பி.ஜி., தகன மேடை கட்டப்பட்டது. 1.76 கோடியில் கட்டப்பட்ட தகனமேடை பல மாதங்களாக பூட்டியே இருக்கிறது. இதனால் மக்கள் தொடர்ந்து அடிப்படை வசதிகள் இல்லாத மயானங்களை நோக்கி செல்லும் நிலை உள்ளது. எனவே நகராட்சி நிர்வாகம் எல்.பி.ஜி., தகன மேடை கட்டடத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.