கலவை:ராணிப்பேட்டை மாவட்டம், கலவை அடுத்த குப்படிசாத்தம் கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார், 30; திருமணமான இவர், சென்னை வேளச்சேரியிலுள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அங்கு சென்னை பெருங்குடியை சேர்ந்த கணவனை இழந்த பெண் சத்தியவாணி, 36, என்பவரும் பணிபுரிந்தார். அவருக்கு, மகன், மகள் உள்ளனர். சதீஷ்குமாரும், சத்தியவாணியும் கடந்த, 2018 முதல், கள்ளத்தொடர்பில் இருந்தனர். இந்நிலையில், சத்தியவாணி தன்னை திருமணம் செய்து கொள்ள சதீஷ்குமாரிடம் கூறினார். இதனால் சதீஷ்குமார், பணிக்கு செல்லாமல், சொந்த ஊரான குப்படிசாத்தம் கிராமத்திற்கு, கடந்த சில நாட்களுக்கு முன் சென்று விட்டார். மொபைல்போனில் சத்திவாணி அழைத்தபோது, அதை சதீஷ்குமாரின் துண்டித்து வந்தார். ஆத்திரமடைந்த சத்தியவாணி, அவரை கடத்தி வர, 4 பேர் கொண்ட கூலிப்படையை நேற்று முன்தினம் குப்படிசாத்தம் கிராமத்திற்கு அனுப்பினார். அவர்கள் அங்கு சென்ற போது, சதீஷ்குமார் இல்லாததால், அவரது அண்ணன் ரஞ்சித்குமார், 35, என்பவரை கடத்தினர்.இது குறித்து அவரது குடும்பத்தினர் புகார் படி, வாழைப்பந்தல் போலீசார், சென்னை சென்று கடத்தப்பட்ட ரஞ்சித்குமாரை மீட்டு, சத்தியவாணியை கைது செய்தனர். மேலும், தலைமறைவான கூலிப்படையை சேர்ந்த, 4 பேரை தேடி வருகின்றனர்.