சங்கமித்ரா எக்ஸ்பிரஸ் ரயிலில் பிரேக் பழுதால் தீப்பொறி
ராணிப்பேட்டை:பீஹார் மாநிலம், தானாபூர் ரயில்வே ஸ்டேஷனிலிருந்து பெங்களூரு வரை செல்லும், சங்கமித்ரா எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று வழக்கம் போல அரக்கோணம் ரயில்வே ஸ்டேஷனை கடந்தது. நேற்று பகல், 12:00 மணிக்கு காட்பாடி நோக்கி சென்றபோது, வழியில் திடீரென ரயில் இன்ஜினில் பிரேக் பழுது ஏற்பட்டு, புகையுடன் தீப்பொறி வந்தது.இதனால், ரயில் இன்ஜின் டிரைவர் உடனடியாக அருகிலுள்ள சோளிங்கர் ரயில்வே ஸ்டேஷனிற்கு தகவல் தெரிவித்தார். சோளிங்கர் ரயில்வே ஸ்டேஷனில் தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் இருந்தனர். ரயில் சோளிங்கர் ரயில்வே ஸ்டேஷன் சென்றதும், தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.பின், காட்பாடியிலிருந்து மாற்று இன்ஜின் கொண்டு வரப்பட்டு, 2:00 மணி நேரம் காலதாமதமாக ரயில் புறப்பட்டு சென்றது. இதனால், பயணியர் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.