குடும்பம் நடத்த வர மறுத்ததால் மனைவியை கடித்த கணவன் கைது
நெமிலி நெமிலி அருகே, மனைவியை கடித்த கணவனை, போலீசார் கைது செய்தனர். ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அடுத்த நெல்வாய் கண்டிகை கிராமத்தை சேர்ந்தவர் புருஷோத்தமன், 38. லாரி டிரைவர். இவருக்கு கடந்த, 15 ஆண்டுகளுக்கு முன்பு, அதே பகுதியை சேர்ந்த, ஜெயசித்ரா, 34, என்பவருடன் திருமணம் நடந்தது. தம்பதிக்கு, 3 பெண் குழந்தைகள் உள்ளனர். கருத்து வேறுபாடால் கணவரை பிரிந்த ஜெயசித்ரா, கடந்த, 5 ஆண்டுகளாக தாய் வீட்டில் வசிக்கிறார். நேற்று முன்தினம் இரவு, மது போதையில் மாமியார் வீட்டிற்கு சென்ற புருஷோத்தமன், குடும்பம் நடத்த வருமாறு மனைவி ஜெயசித்ராவை அழைத்தார். வர மறுத்த அவரை கைகளால் தாக்கி, உடல் முழுவதும் கடித்தார். வலி தாங்க முடியாமல் ஜெயசித்ரா அலறி கூச்சலிட்டார். இதை கேட்ட அக்கம் பக்கத்தினர் வந்து, அவரை மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். நெமிலி போலீசார், லாரி டிரைவர் புருஷோத்தமனை நேற்று கைது செய்தனர்.