சேலம்: உறவினர்கள் ஆதரவு இல்லாததால், தாய், தந்தையை இழந்த சகோதரிகள் மேல் படிப்புக்கு உதவி செய்யக்கோரி, கலெக்டரிடம் மனு அளித்தனர். சேலம் மாவட்டம், வாழப்பாடி தாலுகா மாசிநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் நாராயணன். அவரது மனைவி மாணிக்கம்மாள். இவர்கள் இருவரும், பத்து ஆண்டுக்கு முன் இறந்து விட்டனர். அவர்களுக்கு, சந்திரா(28), சங்கீதா(17), மகேஸ்வரி(20) ஆகிய மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். தாய், தந்தையை இழந்து தவிக்கும், அவர்களை மூத்த சகோதரி சந்திரா, கூலி வேலை செய்து படிக்க வைத்தார். கிறிஸ்டியன் விடுதியில் தங்கி ப்ளஸ் 2 முடித்த சங்கீதா, மேற்படிப்புக்கு செல்வதற்கு வசதியில்லாததால், தவித்து வருகிறார். உறவினர்கள் ஆதரவு இல்லாததால், பெண் குழந்தைகள் என்ன செய்வதென தெரியாமல் தவித்து வருகின்றனர். சங்கீதா, மேல்படிப்புக்காக பலமுறை கல்லூரிகளுக்கு அலைந்தபோதும், யாரும் உதவி செய்வதாக இல்லை. கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு அளித்தபோதும், அதிகாரிகள் அலட்சியப் போக்கையை கடைபிடிக்கின்றனர். சகோதரியுடன் வந்த சந்திரா, தன்னுடைய தங்கை சங்கீதா மேல்படிப்புக்கு அரசு இலவசமாக உதவி செய்ய வேண்டும். உதவி கேட்டு பலமுறை கலெக்டர் அலுவலகம் வந்துள்ளேன். ஆனால், எங்களை கேவலமாகவே பார்க்கின்றனர். முதல்வர் ஜெயலலிதா, கருணையுடன், எங்களது எதிர்கால வாழ்வுக்கு வழி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். தாய், தந்தையை இழந்து தவிக்கும் எங்களுக்கு நல்லதொரு வாய்ப்பை, கலெக்டர் வழங்க வேண்டும், என கண்ணீருடன் கூறினர்.