| ADDED : ஜூலை 13, 2011 03:29 AM
சென்னை: தமிழகத்திலுள்ள, 1059 ஆதிதிராவிடர் நலத்துறை விடுதிகளை பழுதுபார்த்து அடிப்படை வசதிகளை மேம்படுத்த, 76 கோடியே 33 லட்சம் ரூபாயை முதல்வர் ஜெயலலிதா ஒதுக்கீடு செய்துள்ளார்.அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:'ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ, மாணவியருக்கு சிறந்த கல்வி கிடைக்க, அவர்கள் தங்கிப் பயிலும் விடுதிகள் நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்படும்' என, தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்திருந்தோம்.மேலும், தமிழகத்திலுள்ள அரசு ஆதிதிராவிடர் நலத்துறை விடுதிகள் அனைத்தும் சரிவர பராமரிக்கப்படாமல், மாணவர்கள் அவதிக்குள்ளாவது, நான் முதல்வராக பதவியேற்றதும் என் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. அதுபற்றிய முழு விவரங்களை சேகரிக்க நான் உத்தரவிட்டேன்.இதன்படி, துறை அதிகாரிகள் ஆய்வு செய்ததில், மாநிலம் முழுவதுமுள்ள, 1294 விடுதிகளில், 1059 விடுதிகள் சரிவர பராமரிக்கப்படாமல் இருந்ததும், குடிநீர், கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள் சரிவர இல்லாமல் இருந்ததும் கண்டறியப்பட்டது.எனவே, 1059 ஆதிதிராவிடர் நலத்துறை விடுதிகளில் பழுதுபார்ப்பு, சிறப்பு பராமரிப்பு, கூடுதல் கட்டுமானப் பணிகள் மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகளை மேற்கொள்ள, 76 கோடியே 33 லட்சத்து, 46 ஆயிரம் ரூபாய் நிதி ஒப்பளிப்பு செய்து நான் ஆணையிட்டுள்ளேன்.