உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / போக்குவரத்து கழகத்தில் பலே மோசடி மேலாளர் உட்பட 5 பேர் சஸ்பெண்ட்

போக்குவரத்து கழகத்தில் பலே மோசடி மேலாளர் உட்பட 5 பேர் சஸ்பெண்ட்

சேலம்: சேலம் அரசு போக்குவரத்து பணிமனையில், 11 லட்சம் ரூபாய் மோசடி செய்த விவகாரத்தில், கிளை மேலாளர் உட்பட ஐந்து பேர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். சேலம் அஸ்தம்பட்டி அரசு போக்குவரத்து கிளை பணிமனையில், நிரந்தர டிரைவர், கண்டக்டர் பெயரில் மோசடி நடந்ததாக புகார் எழுந்தது. தர்மபுரி உட்தணிக்கை கண்காணிப்பாளர் ரமேஷ் தலைமையில் குழுவினர் மறு தணிக்கை நடத்தினர். இதில், நிரந்தர கண்டக்டர், டிரைவர் பெயரில் தற்காலிக ஊழியர்களை வைத்து, சேலம் - பெங்களூரு; சேலம் - வேலுார் தடத்தில் அரசு பஸ்களை இயக்கி முறைகேடு நடந்ததை கண்டுபிடித்தனர். குறிப்பாக, நிரந்தர ஊழியர் மூலம், பஸ்களை வெளியே அனுப்பி, தற்காலிக ஊழியர்களை கொண்டு இயக்கி, பின் நிரந்தர ஊழியர் மூலம் பணிமனையில் நிறுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். பணிக்கு வரும் டிரைவர், கண்டக்டர், பணியை முடிக்க தலா, 2 நாள் ஆகும். நிரந்தர ஊழியருக்கு தினசரி ஊதியம், 2,500 -- 3,000 ரூபாய்; ஆனால், தற்காலிக ஊழியருக்கு, 750 ரூபாய் தான் ஊதியம். இதன்படி, தற்காலிக ஊழியருக்கு, 2 நாள் ஊதியம், 1,500 ரூபாய் போக, மீதி, 4,500 ரூபாய் மோசடி நடந்துள்ளது. கடந்த ஏப்., முதல் ஜூன் வரை மூன்று மாதங்களில் மட்டும் 11 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, கண்டக்டர்கள் தேவன், ரவி, பயணச்சீட்டு பரிசோதகர் பெருமாள், இளநிலை உதவியாளர் வெங்கடாசலம், அஸ்தம்பட்டி கிளை மேலாளர் சீனிவாசன் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து, தர்மபுரி மண்டல பொது மேலாளர் செல்வம் உத்தரவிட்டார். இதில், தேவன், ரவி, தி.மு.க., தொழிற் சங்கமான தொ.மு.ச.,வை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மிகப்பெரிய ஊழல் மூன்று மாதத்திலேயே, 11 லட்சம் ரூபாய் மோசடி கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. தி.மு.க., ஆட்சியின் நான்கரை ஆண்டில் நடந்த மோசடி பல கோடியை தாண்டும். தமிழகம் முழுதும் கிளை பணிமனைகளில் மறு தணிக்கை நடந்தால் பெரிய ஊழல் வெளிச்சத்துக்கு வரும். பத்மநாபன், பொதுச்செயலர், தமிழ்நாடு அரசு போக்குவரத்து பணியாளர் சம்மேளனம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ