வரி செலுத்தாதவர்களுக்கு கூடுதல் குடிநீர் வினியோகம்
மேட்டூர் நகராட்சி கவுன்சிலர் கூட்டம் நேற்று நடந்தது. தி.மு.க.,வை சேர்ந்த, தலைவி சந்திரா தலைமை வகித்தார். அதில் கவுன்சிலர்கள் பேசியதாவது:வி.சி., - மாரியம்மாள்: நகராட்சியில், 2,000 வீடுகளுக்கு வரி வசூலிப்பதில்லை. இதனால் நகராட்சிக்கு, பல லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. வரி செலுத்துபவர்களை விட செலுத்தாதவர்களின் வீடுகளுக்கே அதிக அளவில் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இதனால் வரி செலுத்தும் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.தி.மு.க., - சாந்தி: காவிரி கரையோரம் உள்ள என் வீட்டுக்கு குடிநீர் வந்து, 4 நாட்களாகிறது. பெரும்பாலான மக்கள் குடிநீரின்றி பாதிக்கின்றனர். முறையாக வினியோகிக்க வேண்டும்.தொடர்ந்து பெரும்பாலான கவுன்சிலர்கள், நகராட்சியில் நாய் தொல்லையை கட்டுப்படுத்தவும், பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றியும், இணைப்பு கொடுக்கப்படாத பெரும்பாலான வீடுகளுக்கு உடனே இணைப்பு கொடுக்கவும் வலியுறுத்தினர். நகராட்சி வருவாய் ஆய்வாளர் வாசுதேவன், உதவியாளர் வெங்கடேசன் உள்பட பலர் பங்கேற்றனர்.