வடமாநில வாலிபர் சடலம் விவசாய கிணற்றில் மீட்பு
காரிப்பட்டி,:காரிப்பட்டி, பெரிய கவுண்டாபுரம் ஜே.ஜே.நகரை சேர்ந்த விவசாயி ஏழுமலை, 52. அதே பகுதியில் உள்ள அவரது விவசாய கிணற்றில், நேற்று அதிகாலை, 5:30 மணிக்கு சத்தம் கேட்டது. ஏழுமலை சென்று பார்த்தபோது, மர்ம நபர் விழுந்தது தெரிந்தது.அவர் தகவல்படி, வாழப்பாடி தீயணைப்பு துறையினர், காலை, 6:00 மணிக்கு அங்கு வந்து கிணற்றில் இறங்கி தேடினர். காலை, 8:30 மணிக்கு, சடலத்தை மீட்டனர். பின் காரிப்பட்டி போலீசார், உடலை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.போலீசார் கூறுகையில், '35 வயது மதிக்கத்தக்க வட மாநில வாலிபர் என தெரியவந்துள்ளது. புதரில் கிணறு இருப்பது தெரியாமல் தவறி விழுந்து, அதன் சுவர்களில் அடிபட்டு இறந்திருக்கலாம் என தெரிகிறது. தொடர்ந்து விசாரணை நடக்கிறது' என்றனர்.