நீதிமன்ற வளாகத்தில் தகராறு இருவர் மீது வழக்குப்பதிவு
சேலம்:குடிபோதையில், நீதிமன்ற வளாகத்துக்குள் கார் ஓட்டி வந்து, தகராறில் ஈடுபட்ட இருவர் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.நாமக்கல் மாவட்டம், நாமகிரிபேட்டை அரியாகவுண்டம்பட்டி பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ், 55, இவர் கொல்லிமலை பகுதியில் விவசாயம் பார்த்து வருகிறார். இவருக்கும், இவரது மனைவிக்கும், விவாகரத்து வழக்கு சேலம் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதில் ஆஜராக, நேற்று தனது நண்பர் விருதாசலம் என்பவருடன் வெங்கேடஷ், சேலம் நீதிமன்றம் வந்துள்ளார்.வளாகத்துக்குள் வேகமாக காரில் வந்து, ஹாரன் அடித்ததால், அங்கிருந்தவர்கள் சுற்றி வளைத்துள்ளனர். வெங்கடேஷ் தகராறில் ஈடுபட்டார். அஸ்தம்பட்டி போலீசார், ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.அதில், விவாகரத்து வழக்கில் நேற்று தீர்ப்பு வந்துவிடும் என்ற சந்தோஷத்தில் பீர் குடித்துவிட்டு, வாகனம் ஓட்டி வந்தது தெரியவந்தது. இருவர் மீதும் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக வழக்கு பதிவு செய்துள்ளனர்.