மாணவியர் விடுதியில் பதுங்கிய நாகப்பாம்பு; மூன்று மணி நேரம் போராடி வெளியேற்றம்
பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி, அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் மாணவியர் விடுதி செயல்படுகிறது. நேற்று மதியம், 3:30 மணிக்கு விடுதி வளாகத்தில் நாகப்பாம்பு புகுந்தது. அங்குள்ள நாய், பாம்பை நகர விடாமல் குரைத்துள்ளது.சத்தம் கேட்டு வந்த மாணவியர், பாம்பை கண்டு அச்சமடைந்தனர். ஆசிரியருக்கு தகவல் தெரிவித்தனர். விடுதி சுவர் அருகே காலியாக கிடந்த, 10 அடி நீள சிமென்ட் குழாயில் பாம்பு புகுந்து பதுங்கியது.பனமரத்துப்பட்டி போலீ சார், வாழப்பாடி வனத்துறை ஊழியர் மற்றும் ஆசிரியர்கள், குழாயின் இரு பக்கமும் சாக்கு பை கட்டி, பாம்பை பிடிக்க முயற்சி செய்தனர். ஆனாலும் வெளியே வரவில்லை. குழாயை மைதானத்திற்கு துாக்கி வந்து, புகை போட்டனர். மூன்று மணி நேரம் பல்வேறு யுத்தியை பயன்படுத்தியும், பாம்பு வெளியே வரவில்லை. மாலை, 6:45 மணிக்கு நீளமான மூங்கில் குச்சியை குழாய் உள்ளே விட்டு ஆட்டிய பின், ஆறு அடி நீளமான பாம்பு சீறி பாய்ந்து வெளியேறியது. அதை லாவகமாக வனத்துறை ஊழியர்கள் பிடித்தனர். அதன் பின், விடுதி மாணவியர் நிம்மதியடைந்தனர்.