சாலை விதி மீறிய 306 பேரின்ஓட்டுனர் உரிமம் ரத்து
சேலம்:சேலம் போக்குவரத்துத்துறை கட்டுப்பாட்டில், சேலம் கிழக்கு, மேற்கு, தெற்கு, ஆத்துார், சங்ககிரி, மேட்டூர், தர்மபுரி ஆகிய வட்டார போக்குவரத்து அலுவலகங்கள், ஓமலுார், வாழப்பாடி, பாலக்கோடு, அரூரில் பகுதி நேர அலுவலகங்கள் உள்ளன. கடந்த மார்ச்சில், 11 அலுவலக பகுதிகளில், வட்டார போக்குவரத்து அலுவலர் தலைமையில் குழுவினர், 1,166 வாகனங்களை சோதனைக்கு உட்படுத்தினர். அதில், 306 பேரின் உரிமம் தற்காலிக ரத்து செய்யப்பட்டுள்ளது. மொபைலில் பேசியபடி ஓட்டிய, 115 பேர், போதையில் ஓட்டிய, 46 பேர், சிக்னலை தாண்டிய, 72 பேர், அதிக பயணியரை ஏற்றிய, 36 பேர் உள்ளிட்ட விதிமீறல் அடங்கும்.தவிர அதிக பாரம் ஏற்றியது, அதிக வெளிச்சத்துடன் முகப்பு விளக்கை எரியவிட்டது, சீட் பெல்ட் அணியாதது, ஏர்ஹாரனில் அதிக சத்தம் எழுப்பியது போன்ற விதிமீறல்கள் கண்டறியப்பட்டு, 41.57 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு, அதில், 16.74 லட்சம் ரூபாய் உடனே வசூலிக்கப்பட்டது. மேலும், 13.05 லட்சம் ரூபாய் சாலை வரி வசூலானது. வெளி மாவட்டத்தை சேர்ந்த வாகனங்களுக்கு, 52,425 ரூபாய் சாலை வரி விதிக்கப்பட்டது. தகுதிச்சான்று(எப்.சி.,), அனுமதி சீட்டு(பர்மிட்) இல்லாத, 167 வாகனங்கள் சிறைபிடிக்கப்பட்டதாக, போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.