மேட்டூர் அணையில் உபரி நீர் நிறுத்தம்
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்த நிலையில், 16 கண் மதகில் உபரிநீர் நிறுத்தப்பட்டது.மேட்டூர் அணை நீர்மட்டம் கடந்த 18ம் தேதி காலை, 117.44 அடியாக இருந்தது. இந்நிலையில் கர்நாடகா அணைகளில் இருந்து திறக்கப்பட்ட கூடுதல் உபரிநீர் திறப்பால், அன்று மாலை, 4:00 மணிக்கு, 16 கண் மதகு வழியே, 13,700 கனஅடி உபரிநீர் காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டது. பின் நீர்வரத்து குறைந்ததால் உபரிநீர் திறப்பு படிப்படியாக குறைக்கப்பட்டது. நேற்று காலை, 19,000 கனஅடியாக குறைக்கப்பட்டது. அதேநேரம், 16 கண் மதகில் திறந்த உபரிநீர் ஐந்து நாட்களுக்கு பின் நேற்று காலை, 10:00 மணிக்கு நிறுத்தப்பட்டது. மாலை, 4:00 மணிக்கு, நீர்திறப்பு, 10,000 கன அடியாக குறைக்கப்பட்டு, மின் உற்பத்தி நிலையங்கள் வழியே டெல்டா பாசனத்துக்கு திறக்கப்பட்டது.