100 விளையாட்டு வீரர்களுக்கு விரைவில் அரசுப்பணி; துணை முதல்வர் உதயநிதி தகவல்
சேலம்: ''விளையாட்டு வீரர்கள், 100 பேருக்கு விரைவில் அரசுப்பணி வழங்கப்படும்,'' என, துணை முதல்வர் உதயநிதி பேசினார்.தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பில் சேலம், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளுக்கு, விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா, சேலம் நேரு கலையரங்கில் நேற்று நடந்தது. சேலம் கலெக்டர் பிருந்தாதேவி வரவேற்றார். தலைமை வகித்து துணை முதல்வர் உதயநிதி பேசியதாவது: சேலம், நாமக்கல் மாவட்டங்களில், 707 ஊராட்சிகளில், 1,070 வீரர்களுக்கு விளையாட்டு உபகரணம் வழங்கப்படுகிறது. 12,525 ஊராட்சிகளுக்கு, 86 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, 26 மாவட்டங்களில் இதுவரை உபகரணம் வழங்கப்பட்டுள்ளது. இதில், 27வது மாவட்டமாக சேலத்தில் வழங்கப்படுகிறது. மேடையில் உள்ள பாராலிம்பிக் வீரர்கள் மாரியப்பன், துளசிமதி, விளையாட்டில் சாதிக்க துடிப்பவர்களுக்கு உதாரணமாக திகழ்கின்றனர். எனக்கு 'இன்ஸ்பிரேஷனாக' தங்கை துளசிமதி உள்ளார். அவரது சாதனை, பதக்கங்களை பார்க்கும்போது வாரம் ஒரு மணி நேரமாவது, பாட்மின்டன் விளையாட தோன்றுகிறது. முதல்வர் கோப்பை விளையாட்டுக்கு, 83 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, 36 வகை போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. சேலத்தில் கடந்தாண்டு இப்போட்டியில் கலந்து கொண்டவர்கள், 6 லட்சம் பேர். தற்போது, 11 லட்சம் பேர் பங்கேற்றுள்ளனர். கடந்த முறை, 19வது இடத்தில் இருந்த சேலம், மூன்றாமிடத்தில் தற்போது உள்ளது. அதேபோல், 13வது இடத்தில் இருந்து ஒன்பதாவது இடத்துக்கு நாமக்கல் முன்னேறியுள்ளது.கடந்த மூன்றாண்டுகளில், 3,350 வீரர்களுக்கு, 110 கோடி ரூபாய் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், 3 சதவீத இட ஒதுக்கீட்டில் விளையாட்டு வீரர்கள், 100 பேருக்கு விரைவில் அரசுப்பணி வழங்கப்படும். தமிழ்நாடு சாம்பியன்ஷிப் அறக்கட்டளை சார்பில், இரண்டு ஆண்டுகளில் ஏழை விளையாட்டு வீரர்கள், 680 பேருக்கு 12 கோடி ரூபாய், பாராலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற, 4 பேருக்கு, 5 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.கலைஞர் விளையாட்டு உபகரணங்களை எப்படி பயன்படுத்துகிறார்கள் என தொடர்ந்து ஆய்வு செய்து இத்திட்டத்தை நகரங்களுக்கும் விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும். சேலத்தில் பன்னோக்கு விளையாட்டு மைய கட்டுமானப்பணி, 20 கோடி ரூபாய் மதிப்பில் தொடங்கி நடந்து வருகிறது. மேட்டூர், ஆத்துார், சேந்தமங்கலம் சட்டசபை தொகுதிகளில் தலா, 3 கோடி ரூபாய் மதிப்பில் மினி விளையாட்டு அரங்கம் நிறுவப்பட உள்ளது. சேலம் காந்தி மைதானம், 3.63 கோடி ரூபாய் மதிப்பில் மேம்படுத்தப்படும். அத்துடன் சேலத்தில், 60 வீரர்கள் தங்கி விளையாட, ஏழு கோடி ரூபாய் மதிப்பில் விடுதி கட்டப்படும். இவ்வாறு உதயநிதி பேசினார்.தொடர்ந்து இரு மாவட்ட வீரர்கள், 1,110 பேருக்கு விளையாட்டு உபகரணங்கள், 3,583 பயனாளிகளுக்கு, 33.26 கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். முன்னதாக கிராம ஊராட்சிகளுக்கு விளையாட்டு உபகரணங்களை எடுத்துச்செல்லும் வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.விழாவில் அமைச்சர்கள் ராஜேந்திரன், மதிவேந்தன், சேலம் மேயர் ராமச்சந்திரன், எம்.பி.,க்கள் செல்வகணபதி, ராஜேஷ்குமார், மலையரசன், மணி, மாதேஸ்வரன், பிரகாஷ், எம்.எல்.ஏ.,க்கள் ராமலிங்கம், அருள், பொன்னுசாமி, கூடுதல் தலைமை செயலர் அதுல்யா மிஸ்ரா, விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் மேகநாதரெட்டி, சேலம் மாநகராட்சி கமிஷனர் ரஞ்ஜீத்சிங், நாமக்கல் கலெக்டர் உமா, முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் சின்னதுரை, சிவலிங்கம், சேலம் மத்திய மாவட்ட தி.மு.க., இளைஞரணி அமைப்பாளர் அருண் பிரசன்னா உள்பட பலர் பங்கேற்றனர்.