7 கதவணைகளில் மின் உற்பத்தி நிறுத்தம்
மேட்டூர்: மேட்டூர் அணை அடிவாரம் முதல் கரூர் வரை, ஒவ்வொரு, 10 கி.மீ.,க்கு இடையே செக்கானுார், நெருஞ்சிப்பேட்டை, குதிரைக்கல்மேடு, ஊராட்சிக்கோட்டை, சமயசங்கிலி, வெண்டிப்பாளையம், சோளசிராமணி என, 7 இடங்களில், கதவணை மின் உற்பத்தி நிலையங்கள் உள்ளன. ஒன்றில், 30 வீதம், 7 கதவணைகளில், 210 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய, காவிரி ஆற்றில் வினாடிக்கு, 20,000 கன அடி நீர் திறக்க வேண்டும்.அதிகபட்சம், 35,000 கனஅடி நீர் காவிரியில் வெளியேறும் வரை, கதவணைகளில் மின் உற்பத்தி செய்யப்படும். ஆனால் நேற்று மதியம் வினாடிக்கு, 75,000 கனஅடி, மாலை, 1 லட்சம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. இதனால் கதவணைகளில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.அதேநேரம் பாசனத்துக்கு திறக்கப்படும், 25,000 கன அடி நீர் மூலம், அடிவாரம் உள்ள அணை மின் நிலையத்தில், 50 மெகாவாட், சுரங்க மின் நிலையத்தில், 200 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யலாம். ஆனால், 3வது அலகில் பழுதுபார்ப்பு பணியால், 50 மெகாவாட் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. தவிர கடந்த, 22 முதல், 18,000 கனஅடி நீர், அணை, சுரங்க மின் உற்பத்தி நிலையங்கள் வழியே வெளியேற்றி, 200 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.