ஆக்கிரமிப்பு அகற்ற லஞ்சம் தரகருடன் ஆர்.ஐ., கைது
வாழப்பாடி:சேலம் மாவட்டம் வாழப்பாடி, பெரியகவுண்டாபுரத்தை சேர்ந்த முருகேசன் மகன் யோகேஸ்வரன், 24. இவரது விவசாய நிலம் அருகே, ஓடை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதற்கு நடவடிக்கை எடுக்கக் கோரி, வாழப்பாடி தாசில்தார் அலுவலகத்தில், யோகேஸ்வரன் புகார் கொடுத்தார். அதற்கு, தாசில்தார் அலுவலகத்தில் முதுநிலை வருவாய் ஆய்வாளர் எனும், ஆர்.ஐ.,யாக பணிபுரியும் கார்த்தி, 44, என்பவர், 15,000 ரூபாய் லஞ்சம் கேட்டார்.இதுகுறித்து யோகேஸ்வரன், சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் தெரிவித்தார். அவர்களது ஆலோசனைப்படி, நேற்று மதியம், 12:00 மணிக்கு, தாசில்தார் அலுவலகத்தில் யோகேஸ்வரன், 15,000 ரூபாயை, தரகராக செயல்பட்ட முருகமணி, 53, என்பவரிடம் வழங்கினார். அப்போது, அங்கு மறைந்திருந்த போலீசார், முருகமணியை கைது செய்தனர். அவர் அளித்த வாக்குமூலம் படி, கார்த்தியையும் கைது செய்தனர். தொடர்ந்து பணத்தை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.