ஏலச்சீட்டு நடத்தி ரூ.30 லட்சம் மோசடி
சேலம், சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே பவளத்தானுாரில் உள்ள, இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தை சேர்ந்த சிலர், நேற்று கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனு: பவளத்தானுாரில் இலங்கை தமிழர் மறுவாழ்வு மைய பகுதியில் ஜீவானந்தம், அவரது மனைவி மணிமேகலை ஆகியோர், 10 ஆண்டுக்கு மேலாக ஏலச்சீட்டு நடத்தினர். அப்பகுதியை சேர்ந்த, 200க்கும் மேற்பட்டோர் சேர்ந்து பணம் கட்டி வந்தனர். இதில், 20 பேரின் பணமாக, 30 லட்சம் ரூபாய் வழங்க வேண்டியிருந்தது. ஆனால் கடந்த மே மாதம், தம்பதியர் தலைமறைவாகினர். இதுகுறித்து தாரமங்கலம் போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து, பணத்தை மீட்டுத்தர வேண்டும்.