சேலம்: உள்ளாட்சி தேர்தலில், தி.மு.க., சார்பில் மேயர், நகராட்சி தலைவர்
பதவிக்கு போட்டியிடுவோர், நேர்காணல் மூலமே தேர்ந்தெடுக்கப்படுவர். கட்சி
தலைமை யாருக்கு வாய்ப்பு அளிக்கிறதோ, அவர்கள் வெற்றிக்கு மற்றவர்கள் பாடுபட
வேண்டும் என, தி.மு.க., மாவட்ட செயலாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.சட்டசபை தேர்தல் தோல்வி, தி.மு.க.,வினரை வெகுவாக பாதித்துள்ளது. கட்சியின்
முன்னணி நிர்வாகிகளும், முன்னாள் அமைச்சர்களும் நில அபகரிப்பு, மிரட்டல்
வழக்குகளில் சிறை சென்றிருப்பது, தொண்டர்களை சோர்வடைய செய்துள்ளது.
உள்ளாட்சி தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று, அ.தி.மு.க.,
அரசின் பழிவாங்கும் போக்குக்கு, பதிலடி கொடுக்க வேண்டும் என, கட்சி தலைமை
அறிவித்துள்ளது.ஒவ்வொரு மாவட்டத்திலும், உள்ளாட்சி பதவிகளுக்கான விருப்ப
மனுக்கள் பெறப்பட்டு, சென்னையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில்
ஒப்படைக்கப்பட்டுள்ளது. தேர்தல் தேதி அறிவிப்புக்கு பின், நேர்காணல்
நடத்தப்பட்டு, மேயர், நகராட்சி வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவர்.தி.மு.க.,வை
பொறுத்தவரை, மாவட்ட செயலாளர், அவருக்கு பின், ஸ்டாலின், அழகிரி கோஷ்டியாக
இருந்தால், அவர்களுடைய ஆதரவு இருந்தால் மட்டுமே நேர்காணல் வரை செல்ல
முடியும். தற்போது, மேயரை மக்களே நேரடியாக தேர்ந்தெடுக்கும் முறை
அமல்படுத்தப்படுகிறது. அதனால், மேயர் வேட்பாளராக போட்டியிட விரும்பி,
மாநகராட்சி பகுதிகளில் அதிகப்படியானோர் விண்ணப்பித்துள்ளனர். தேர்தல் தேதி
அறிவிப்பை எதிர்பார்த்து நிர்வாகிகள் காத்திருக்கின்றனர்.தி.மு.க., முன்னணி
நிர்வாகிகள் கூறியதாவது:சட்டசபை தேர்தலானாலும், உள்ளாட்சி தேர்தலானாலும்,
தி.மு.க.,வில் எப்போதுமே நேர்காணல் நடத்தப்படும். நேர்காணலில், தேர்வு
செய்யப்படுவது யாராக இருந்தாலும், அவரது வெற்றிக்கு, கட்சி நிர்வாகிகள்
மற்றும் தொண்டர்கள் பாடுபட வேண்டும். அந்த நடைமுறைதான் வரும் உள்ளாட்சி
தேர்தலிலும் இருக்கும். குறிப்பிட்ட நபர் தேர்வு செய்யப்பட்டிருந்தாலும்,
விண்ணபித்த அனைவரையும் நேர்காணலுக்கு அழைத்து பேசுவர். நேர்காணல் நடத்தாமல்
தன்னிச்சையாக அறிவிக்க வாய்ப்பில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.