உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஆசிரியர் சஸ்பெண்ட் விவகாரம்: கல்வி அலுவலர் விசாரணை

ஆசிரியர் சஸ்பெண்ட் விவகாரம்: கல்வி அலுவலர் விசாரணை

தலைவாசல், நவ. 26-தலைவாசல் அருகே, கிழக்கு ராஜாபாளையம் கிராமத்தில் உள்ள, அரசு உயர்நிலைப்பள்ளியில், 90க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். பள்ளி கணித ஆசிரியர் ஜெயபிரகாஷிற்கு, மாணவர்கள் கால் பிடித்து விடும் வீடியோ கடந்த, 22ல், வெளியானது. வீடியோ தொடர்பாக, சேலம் முதன்மை கல்வி அலுவலர் கபீர், ஆசிரியர் ஜெயபிரகாசை 'சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டார்.கடந்த, 23ல், பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள், ஆசிரியர் சஸ்பெண்ட் உத்தரவை திரும்ப பெற வேண்டும். வீடியோ குறித்து முழுமையாக விசாரிக்க வேண்டும் என, சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, நேற்று சேலம் மாவட்ட இடைநிலை கல்வி அலுவலர் நரசிம்மன் தலைமையிலான கல்வித்துறை அலுவலர்கள், உயர்நிலை பள்ளிக்கு நேரில் சென்று மாணவர்கள், பெற்றோர், பொதுமக்களிடம் விசாரணை செய்தனர்.அப்போது மாணவர்கள், 'ஆசிரியர் ஜெயபிரகாஷ் உடல் நிலை பாதித்து மயக்கம் ஏற்பட்டபோது, கால் பிடித்துவிட்டோம்' என்றனர். 'ஆசிரியர்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள காழ்ப்புணர்ச்சியில், பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களே, வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர்' என, பொதுமக்கள் புகார் மனு அளித்தனர்.''இது தொடர்பான விசாரணை அறிக்கை, சேலம் முதன்மை கல்வி அலுவலரிடம் வழங்கப்பட்டு உரிய நடவடிக்கை மற்றும் தீர்வு காணப்படும்,'' என, இடைநிலை கல்வி அலுவலர் நரசிம்மன் கூறினார்.இந்நிலையில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட கணித ஆசிரியர் ஜெயபிரகாஷிற்கு பதிலாக, காட்டுக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி கணித ஆசிரியர் பெரியசாமி தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி