மக்கள் மனுக்களுக்கு உரிய தீர்வு சுற்றுலா அமைச்சர் நம்பிக்கை
மக்கள் மனுக்களுக்கு உரிய தீர்வுசுற்றுலா அமைச்சர் நம்பிக்கைஇடைப்பாடி, அக். 24-''மக்கள் கொடுக்கும் மனுக்களுக்கு உரிய தீர்வு காணப்படும்,'' என, சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் பேசினார்.சேலம் மாவட்டம் இடைப்பாடியில் ஒன்றிய, நகர பகுதி மக்கள் சந்திப்பு திட்ட முகாம், தாலுகா அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் பிருந்தாதேவி தலைமை வகித்தார். அதில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் பேசியதாவது: முகாமுக்கு அரசின் அனைத்து துறை அதிகாரிகள் வந்துள்ளனர். துறை சார்பில் தனித்தனியே மனுக்கள் பெற்றுக்கொண்டு ரசீது தருவார்கள். அதனால் மனுக்களை கொண்டு வந்துள்ள மக்கள், கொடுத்த மனுவுக்கு உரிய ரசீது பெற்றுச்செல்ல வேண்டும். அப்போது தான் மனு மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என தெரிய வரும். மேலும் மக்கள் கொடுக்கும் மனுக்களுக்கு உரிய தீர்வு காணப்படும். முன்னாள் முதல்வர் கருணாநிதி கூற்றுப்படி மக்கள் சேவை செய்யவே வந்துள்ளோம். அதை நீங்கள் அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.அதேபோல் சங்ககிரி தாலுகா அலுவலகம், கொங்கணாபுரம் ஒன்றிய அலுவலகத்தில் முகாம் நடந்தது. இதில் பட்டா மாறுதல், மின் இணைப்பு பெயர் மாற்றம், கைத்தெளிப்பான் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை, 112 பேருக்கு அமைச்சர் வழங்கினார்.இந்நிகழ்ச்சிகளில் எம்.பி.,க்கள் சேலம் செல்வகணபதி, நாமக்கல் மாதேஸ்வரன், இடைப்பாடி நகராட்சி தலைவர் பாஷா, ஒன்றிய செயலாளர்கள் கொங்கணாபுரம் பரமசிவம், இடைப்பாடி நல்லதம்பி, சித்துார் ஊராட்சி தலைவர் நாகராஜன், கொங்கணாபுரம் டவுன் பஞ்சாயத்து தலைவர் சுந்தரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.