வேலை தேடி வந்த 8 பேரை கடத்தி ரூ.64 ஆயிரம் பறித்த வாலிபர் கைது
சேலம்,பீகாரை சேர்ந்த, 8 பேர் வேலை தேடி ரயிலில் சேலம் வந்தனர். ரயிலில் அவர்களிடம் பேசிய ஒருவர், விசிட்டிங் கார்டு கொடுத்து, இதில் உள்ள நம்பரை தொடர்பு கொண்டால் வேலை கிடைக்கும் என தெரிவித்துள்ளார். உங்களை அவர்களே அழைத்து செல்வார் எனவும், கூறியுள்ளார். இதை நம்பிய அவர்கள் கடந்த, 26ம் தேதி சேலம் ரயில் நிலையம் வந்தனர். அப்போது விசிட்டிங் கார்டில் இருந்த நம்பரை அவர்கள் தொடர்பு கொண்டனர். சிறிது நேரத்தில் இரண்டு கார் வந்தது. அவர்கள் அனைவரும் காரில் ஏறியவுடன் சிறிது துாரம் சென்றது. பின், காரை நிறுத்தி அவர்களிடம் இருந்த மொபைல்போன், 64 ஆயிரம் ரூபாய் ஆகியவற்றை பறித்து விட்டு, அவர்களை இறக்கி விட்டு தப்பி சென்றனர்.இது குறித்து, பீகாரை சேர்ந்த லக்குமண அன்சாரி என்பவர் அளித்த புகார்படி, சூரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், பணம் பறிப்பில் ஈடுபட்ட காடையாம்பட்டியை சேர்ந்த இந்திரஜித், 29, என்பவரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள சிலரை தேடி வருகின்றனர்.