| ADDED : ஜூலை 15, 2024 04:36 AM
திருப்புவனம் : திருப்புவனத்தில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்களை கண்காணிக்கவும், போக்குவரத்தை கட்டுப்படுத்தவும் வர்த்தகர் சங்கம் சார்பில் நகரின் பிரதான சாலையில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணி நடந்து வருகிறது.திருப்புவனத்தில் 18 வார்டுகளில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். நாளுக்கு நாள் நகர்ப்பகுதியினுள் புதுப்புது குடியிருப்புகள் உருவாகி வருகின்றன. குடியிருப்புகள் அதிகரிக்க அதிகரிக்க திருட்டுச்சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. திருப்புவனம் மார்கெட் வீதியில் நடந்து சென்ற பெண்ணிடம் பட்ட பகலில் 10 பவுன் தங்கச்சங்கிலியை டூவீலரில் வந்த மர்மநபர் பறித்து சென்றார். இதே போல பல இடங்களில் வீட்டு வாசலில் நிறுத்தப்பட்டிருக்கும் டூ வீலர்களும் தொடர்ச்சியாக திருடுபோய் வருகின்றன. பெரும்பாலான சம்பவங்களில் புதுப்புது கும்பல்கள் ஈடுபடுவதால் போலீசார் குற்றவாளிகளை கண்டறிய முடியாமல் திணறுகின்றனர்.வீடு, கடைகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் பலவும் அவர்களது சொந்த பயன்பாட்டை முன்னிறுத்தியே அமைத்துள்ளனர்.திருட்டுச் சம்பவங்களின் போது அந்த சிசிடிவி காட்சிகள் பெரும்பாலும் பலனளிக்கவில்லை. காட்சிகளும் சரிவர பதிவாகுவதும் இல்லை. இதனை தவிர்க்க திருப்புவனம் வர்த்தகர்கள் சங்கம் சார்பில் ரூ.1 லட்சம் செலவில் கோட்டை பஸ் ஸ்டாப், நரிக்குடி ரோடு விலக்கு, மார்கெட் வீதி, சந்தைத்திடல் பஸ் ஸ்டாப் உட்பட 10 இடங்களில் 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்தி வருகின்றனர்.இதற்கான கட்டுப்பாட்டு அறை போலீஸ் பூத்தில் அமைத்துள்ளனர். இதன் மூலம் குற்றவாளிகளை கண்காணிக்கவும், குற்றச் சம்பவங்களை கண்டறிந்து தடுக்க முடியும் என போலீசார் தெரிவிக்கின்றனர்.