கண்ணாடி இல்லாமல் இயக்கப்பட்ட அரசு பஸ் கவலை இல்லாத அதிகாரிகளால் பயணிகள் அவதி
சாலைக்கிராமம்: சிவகங்கை மாவட்டம் சாலைக்கிராமத்திற்கு இயக்கப்பட்ட அரசு பஸ்சின் பின்பக்க கண்ணாடி இல்லாமல் இருந்தது.சிவகங்கை மாவட்டம் கடைக்கோடி பகுதியான சாலைக்கிராமத்திலிருந்து ஆர்.எஸ்.மங்கலம், பரமக்குடி, ராமநாதபுரம், மானாமதுரை, மதுரை, ஆனந்துார், இளையான்குடி உள்ளிட்ட பகுதிகளுக்கு புறநகர் பஸ்களும்,சுற்று வட்டார கிராம பகுதிகளுக்கு டவுன் பஸ்களும் இயக்கப்பட்டு வருகின்றன.இப்பகுதியில் இயக்கப்படும் பெரும்பாலான பஸ்கள் ஓட்டை,உடைசலாக இருப்பதால் பயணிகள் சிரமப்படுகின்றனர்.நேற்று மதியம் 3:00 மணிக்கு சாலைக்கிராமம் பஸ் ஸ்டாண்டிலிருந்து பரமக்குடி சென்ற அரசு புறநகர் டி.என்.63,என்.1479 என்ற எண் பஸ்சின் பின்புறம் கண்ணாடி இல்லாமல் இயக்கப்பட்டது. சாலைக்கிராமத்தைச் சேர்ந்த பயணிகள் கூறியதாவது: தமிழக அரசு மகளிருக்கு இலவசமாக டவுன் பஸ்களில் பயணம் செய்ய உத்தரவிட்டுள்ள நிலையில் ஏராளமான மகளிர் இலவசமாக பயணம் செய்து வருகின்றனர். ஆனால் இலவசமாக பயணம் செய்யும் பெரும்பாலான பஸ்கள் ஓட்டை, உடைசலாகவும்,ஆங்காங்கே பாதி வழியில் பழுதாகி நிற்கும் பஸ்களாக உள்ளது.ஆகவே தமிழக அரசு நல்ல நிலையில் உள்ள பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.டவுன் பஸ்களின் நிலைமை தான் மோசமாக இருக்கிறதென்றால் தற்போது புறநகர் பஸ்களும் அதை விட மோசமாக ஓட்டை உடைசலாகவும்,பின்பக்க கண்ணாடி இல்லாமலும்,வழியில் பழுதாகி ஆங்காங்கே நிற்கும் பஸ்களும் இயக்கப்படுகிறது. மேலும் மாற்று டயர் இல்லாமல் பஞ்சரானால் பயணிகள் நடுவழியில் சிக்கித்தவிக்கும் சூழ்நிலையும் உள்ளது. தமிழக அரசின் சார்பில் இயக்கப்படும் பஸ்களை உடனடியாக பழுது நீக்கியும் பயணிகளுக்கு சிரமம் ஏற்படாத வகையில் புதிய பஸ்களை இயக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.