| ADDED : ஜூன் 19, 2024 05:10 AM
திருப்புவனம், ; திருப்புவனத்தில் ரோட்டை ஆக்கிரமித்து கடைகள் அமைத்திருப்பதால் தினசரி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் தவிப்பிற்குள்ளாகி வருகின்றனர்.மதுரையில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் பாதையில் திருப்புவனம் நகரம் அமைந்துள்ளது. மதுரை நகருக்கு வெகு அருகில் இருப்பதால் நாளுக்கு நாள் திருப்புவனத்தில் குடியேறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. திருப்புவனத்தில் ரோட்டை ஒட்டி இருபுறமும் ஏராளமான கடைகள் உள்ளன. பெரும்பாலும் ரோட்டை ஆக்கிரமித்து கடைகள் வைத்துள்ளனர். திருப்புவனம் நகர்ப்பகுதியினுள் சாலையின் அகலம் ஐந்தரை மீட்டர் இருக்கவேண்டும். ஆனால் ஆக்கிரமிப்பால் ரோடு குறுகி இரண்டு மீட்டராக சுருங்கிவிட்டது. இதனால் எதிர் எதிரே வாகனங்கள் வந்தால் விலக கூட முடியவில்லை. காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் காரணமாக குறிப்பிட்ட நேரத்திற்கு பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லமுடியாமல் மாணவ, மாணவிகள் தவிப்பிற்குள்ளாகி வருகின்றனர். சாலையை ஆக்கிரமித்து கடைகள் வைத்திருப்பதால் பொதுமக்கள் ரோட்டிலேயே நடந்து செல்ல வேண்டியுள்ளது. செவ்வாய் தோறும் நடக்கும் சந்தையன்று வியாபாரிகள் பலரும் ரோட்டிலேயே கடை பரப்பி வியாபாரம் செய்து வருகின்றனர். கடந்த சில ஆண்டாக அரசு பஸ்கள் போதிய பராமரிப்பு இன்றி சாலையோரம் விபத்தை ஏற்படுத்தி வருகின்றன. திருப்புவனம் நகருக்குள் தினசரி 100க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் வந்து செல்கின்றன. ரோட்டை ஆக்கிரமித்து கடைகள் வைத்து வியாபாரம் செய்வதால் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. இங்கு கடந்த 10 ஆண்டுக்கும் மேலாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவே இல்லை. வருவாய்த்துறை, பேரூராட்சி, நெடுஞ்சாலைத்துறை, காவல்துறையினர் இணைந்து ஆக்கிரமிப்புகளை அக்ற வேண்டும்.