தாயமங்கலம் கோவில் முன் ஆட்டோ ஓட்டுநர் கொலை 3 பேர் சிக்கினர்
இளையான்குடி: தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவில் நுழைவுவாயில் முன் ஆட்டோ டிரைவர் வெட்டி கொலை செய்யப்பட்டார். மற்றொரு ஆட்டோ டிரைவர் காயமடைந்த நிலையில், மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே உள்ள கண்ணமங்கலம் கிராமத்தை சேர்ந்த முத்தழகு மகன் சங்கர், 29, ஆட்டோ ஓட்டுநர். இவரிடம் இளையான்குடி அருகே உள்ள கல்லுாரணி கிராமத்தை சேர்ந்த மாதவன் மகன் அன்பு செல்வன் 19, ஆக்டிங் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். தாயமங்கலத்தில் ரோட்டின் நடுவே நிறுத்தப்பட்டிருந்த டூ - வீலரை, நேற்று முன்தினம் இரவு எடுத்த போது காரில் சென்ற சங்கருக்கும், தாயமங்கலத்தை சேர்ந்த பாண்டி மகன் செல்வகுமார், 28, என்பவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டது. இரவு 9:15 மணிக்கு சங்கரை மொபைல் போனில் தாயமங்கலத்தை சேர்ந்த ரவி மகன் முத்துவேல், 27, மற்றும் செல்வகுமார் தாயமங்கலத்திற்கு வருமாறு அழைத்தனர். சங்கர், அவரது தம்பி சரவணன், அன்புச்செல்வன் ஆகியோர் அங்கு சென்ற போது முத்துவேல், செல்வகுமார் உள்ளிட்ட ஆறு பேர் அவர்களிடம் மீண்டும் வாக்குவாதம் செய்து தாக்கினர். முத்துவேல், செல்வகுமார் வாளால் வெட்டியதில் சங்கர் சம்பவ இடத்திலேயே பலியானார். அன்புச்செல்வன் காயமடைந்து, சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். அன்புச்செல்வன் கொடுத்த புகாரின் படி, முத்துவேல், செல்வகுமார், பிரேம்குமார், 22, ஆகியோரை போலீசார் கைது செய்து மேலும் 5 பேரை தேடி வருகின்றனர். இதற்கிடையே, சங்கரின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி, அவரின் உறவினர்கள் இளையான்குடியில் கண்மாய்கரை அருகே நேற்று காலை 10:00 மணி முதல் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தாசில்தார் முருகன் மற்றும் போலீசார் பேச்சு நடத்தி கலைத்தனர்.