சிவகங்கை அருகே 250 ஆண்டு பழமையான கல்வெட்டு கண்டெடுப்பு
சிவகங்கை,: சிவகங்கை அருகே கோவானுாரில் மன்னர் முத்துவடுகநாதர், தளவாய் தாண்டவராயன் பெயர்கள் பொறித்த 250 ஆண்டுகள் பழமை வாய்ந்த கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது.இதுகுறித்து சிவகங்கையில் தொல்நடைக்குழு நிறுவனர் காளிராஜா கூறியதாவது: கோவானுார் முருகன் கோயிலில் 13ம் நுாற்றாண்டு மாறவர்மன் சுந்தரபாண்டியன் கல்வெட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இங்கு சிவன் கோயில் இருந்ததற்கான அடையாளமாக கல்வெட்டுகள் பரவியுள்ளன. இங்குள்ள குடிநீர் ஊருணி படித்துறை, கலுங்குமடையில் 13 ஆம் நுாற்றாண்டு கல்வெட்டு காணப்படுகிறது.கோவானுார் முருகன் கோயிலில் குடமுழுக்கு மராமத்து பணிக்காக அக்கினி மூலையில் இருந்த பழமையான மடப்பள்ளி இடிக்கப்பட்டு அங்கிருந்த கற்கள் அகற்றப்பட்டன. அதிலிருந்து மன்னர் முத்துவடுகநாதர் மற்றும் தளவாய் தாண்டவராயன் பெயர்கள் பொறிக்கப்பட்ட 250 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கிடைத்துள்ளது. இது 13ம் நுாற்றாண்டை சேர்ந்த நான்கு அடி நீளமுள்ள கல்லை பாதிவரை அழித்து இச்செய்தி குறுக்கு நெடுக்காக இரண்டரை அடியில் 14 வரியில் எழுதப்பட்டுள்ளது.இந்த கல்வெட்டில் கடமை, நிலம் போன்ற சொற்கள் இடம் பெற்றுள்ளன. இதன் மூலம் கோவனுார் முருகன் கோயிலுக்கு முத்துவடுகநாதரின் புண்ணியமாக தாண்டவராயன் 1755ல் கட்டி வைத்த மடப்பள்ளி கல்வெட்டு என அறிய முடிகிறது என்றார்.