| ADDED : மார் 21, 2024 02:11 AM
காரைக்குடி: காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் பால்குட திருவிழாவான நேற்று, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம், தீச்சட்டி எடுத்தும் அலகு குத்தியும் தீ மிதித்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.முத்துமாரியம்மன் கோயில், 68வது மாசி பங்குனி திருவிழா மார்ச் 12ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டினர். தொடர்ந்து கோயில் கரகம், மது, முளைப்பாரி எடுக்கும் நிகழ்ச்சியும், நேற்று முக்கிய விழாவான காவடி, பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சியும் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடந்தது.முத்தாலம்மன் கோயிலில் தொடங்கி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் வரை பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. தொடர்ந்து கோயில் முன்பு பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. கோயிலில் கரகம், பால்குடத்தை தொடர்ந்து பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். நகர் முழுவதும் பல இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை அறநிலையத்துறையினர், சேவைக் குழுவினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் காரைக்குடி பஸ்ட் பீட் அருகேயுள்ள பஜார் பள்ளிவாசல் சாலை வழியாக நடந்து செல்வது வழக்கம். நேற்று, வழக்கத்தை விட வெயில் அதிகளவில் இருந்தது. இந்நிலையில் பக்தர்களுக்கு வெயிலின் தாக்கத்தை தணித்திட இஸ்லாமியர்கள் பள்ளிவாசலில் இருந்து குழாய் மூலம் பக்தர்கள் மீதும், சாலையிலும் தண்ணீர் பீய்ச்சி அடித்து பக்தர்களை குளிர்வித்தனர்.