உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / திருப்புவனம் பகுதியில் இரை தேடி வந்த பறவைகள்

திருப்புவனம் பகுதியில் இரை தேடி வந்த பறவைகள்

திருப்புவனம், : திருப்புவனம் பகுதியில் விவசாய பணிகள் நடந்து வரும் நிலையில் வயல்களில் உள்ள புழு, பூச்சிகளை உண்பதற்காக பறவைகள் படையெடுத்து வருகின்றன. திருப்புவனம் வட்டாரத்தில் சமீபத்திய மழையை நம்பி விவசாய பணிகள் தொடங்கியுள்ளன. ஆகஸ்ட் மாத கடைசியில் நெல் விவசாய பணிகள் தொடங்குவது வழக்கம் வடகிழக்கு பருவமழை பெய்யாததால் விவசாயிகள் நெல் விவசாய பணிகளை தொடங்கவில்லை. தற்போது மழை பெய்து வரும் நிலையில் விவசாயிகள் நிலங்களில் உழவு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். திருப்புவனம் வட்டாரத்தில் பிரமனூர், மேலவெள்ளுர், இலந்தைகுளம், கீழடி, பசியாபுரம், ஏனாதி, திருப்பாச்சேத்தி உள்ளிட்ட பகுதி கண்மாய்களில் தண்ணீர் நிரம்பிய வண்ணம் உள்ளது. எனவே வெள்ளை கொக்கு, கருப்பு நாரை, செங்கால் நாரை உள்ளிட்ட ஏராளமான பறவைகள் கூட்டம் கூட்டமாக கண்மாய்களில் உள்ள கருவேல மரங்களில் கூடு கட்டி வருகின்றன.பகலில் விவசாய நிலங்களில் டிராக்டர், உழவு மாடுகள் மூலம் உழவு பணிகள் நடைபெறுவதால் பறவைகள் வயல்களில் உள்ள புழு, பூச்சிகளை உண்ண கூட்டம் கூட்டமாக வருகின்றன. பகலில் வயல்வெளிகளில் மேயும் பறவைகள் இரவில் கண்மாயினுள் கட்டியுள்ள கூடுகளுக்கு பறந்து சென்று வருகின்றன. விவசாயிகள் கூறியதாவது: விவசாய பணிகள் நடப்பதால் வயல்களில் கிடைக்கும் உணவை உண்ணுவதற்காக, ஏராளமான பறவைகள் கண்மாய்களில் உள்ள சீமை கருவேல மரங்களில் கூடுகட்டி வசிக்கின்றன.வெள்ளை கொக்கு, கருப்பு, செங்கால் நாரைகள் வந்துள்ளன. பறவைகளின் எச்சம் நெல் வயல்களில் விழுவதால், பயிர் விளைவதற்கு இயற்கை உரம் கிடைத்து வருவதால், பறவைகளை வரவேற்கிறோம், என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை