உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / திருப்புத்துாரில் காவிரி குடிநீர் சோதனை ஓட்டம் துவக்கம் விநியோகம் சீராகுமா

திருப்புத்துாரில் காவிரி குடிநீர் சோதனை ஓட்டம் துவக்கம் விநியோகம் சீராகுமா

திருப்புத்துார்: சிவகங்கை மாவட்டம் வழியாக செல்லும் காவிரிக்கூட்டுக்குடிநீர் திட்ட புனரமைப்பு பணி நிறைவடைந்து சோதனை ஓட்டம் துவங்கியுள்ளது. 3 மாவட்ட குடியிருப்புக்களில் குடிநீர் விநியோகம் சீராகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.ராமநாதபுரம் மாவட்டத்தின் குடிநீர் தேவைக்காக ரூ.616 கோடியில் ராமநாதபுரம் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்டது. 2010 முதல் செயல்படத் துவங்கிய இத்திட்டத்தில் திருச்சி முத்தரசநல்லூர் காவிரி ஆற்றுப் படுகையிலிருந்து குடிநீர் எடுக்கப்படுகிறது.புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படும் நிலையில் 10 ஆண்டுகளுக்குப் பின் இத்திட்டத்தின் பிரதான குழாய்களில் விரிசல் ஏற்பட்டு பல இடங்களில் குடிநீர் வெளியேறி விநியோகம் பாதிக்கப்பட்டது. பராமரிக்க போதிய நிதி ஒதுக்கப்படாமல் குடிநீர் பல ஆண்டுகளாக வீணானது.இக்குடிநீர் திட்டத்தை புனரமைக்க குடிநீர் வாரியம் திட்டமிட்டது. கூடுதலாக குடிநீர் கிணறு, பிரதான குழாய்களை எம்.எஸ்.குழாய்களாக மாற்றுதல் ஆகியவற்றிற்கு ரூ.555 கோடி அனுமதியானது. 2023ல் திட்டப்பணி துவங்கியது. தற்போது புனரமைப்பு பணிகள் நிறைவடைந்து சோதனை ஓட்டம் நடந்து வருகிறது.குடிநீர் வாரிய பொறியாளர்கள் கூறுகையில், புனரமைப்பிற்கு பின் குடிநீர் கசிவு தடுக்கப்பட்டுள்ளது. தற்போது சோதனை ஓட்டத்தில் விநியோகமாகும் குடிநீர் அளவு 80 சதவீதமாக அதிகரித்துள்ளது. சில வாரங்களில் சோதனை ஓட்டம் முழுமையடையும் போது மேலும் அதிகரிக்கும்' என்றனர். இத்திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம் விரைவில் சீராகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை