மானாமதுரை தர்மசாஸ்தா கோயிலில் கூட்டு பஜனை
மானாமதுரை : மானாமதுரை தர்மசாஸ்தா கோயிலில் நடந்த கூட்டு பஜனையில் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.மானாமதுரையில் உள்ள தர்மசாஸ்தா ஐயப்பன் கோயிலில் கார்த்திகையில் நுாற்றுக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை துவக்கினர். இதையடுத்து தினந்தோறும் கோயிலில் அதிகாலை நடை திறக்கப்பட்டு சுவாமிகளுக்கு அபிஷேக,ஆராதனைகள், படி பூஜைகள் நடைபெற்று வருகின்றன. வாரந்தோறும் புதன் மற்றும் சனிக்கிழமை இரவு ஐயப்ப பக்தர்கள் சார்பில் கூட்டு பஜனை விழா நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற கூட்டு பஜனையில் மானாமதுரை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான ஐயப்ப பக்தர்கள் கலந்து கொண்டு ஐயப்பன், முருகன்,அம்மன், கருப்பண்ண சுவாமி பாடல்களை பாடி பஜனை செய்தனர். முன்னதாக சுவாமிக்கு பால்,பன்னீர், சந்தனம்,திரவியம்,இளநீர்,நெய் உள்ளிட்ட 18 வகையான பொருட்களால் திருமஞ்சனம் செய்யப்பட்டு ஐயப்ப சுவாமிக்கு மலர் அலங்காரம் செய்தனர். அன்னதானம் நடந்தது. குருசாமி, பக்தர்கள் ஏற்பாடுகளை செய்தனர்.