உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / திருப்புவனத்தில் குறைந்து வரும் வெற்றிலை விவசாயம்

திருப்புவனத்தில் குறைந்து வரும் வெற்றிலை விவசாயம்

திருப்புவனம்: திருப்புவனத்தில் வெற்றிலை விவசாயம் பெருமளவு குறைந்து வருவது விவசாயிகளிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது. தென்மாவட்டங்களில் சோழவந்தான், திருப்புவனம்,கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளில் வெற்றிலை விவசாயம் பெருமளவு மேற்கொள்ளப்படுகிறது.திருப்புவனத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் வெற்றிலை விவசாயத்தில் ஈடுபட்டு வந்தனர். அவர்களுக்காக திருப்புவனம் கோட்டையில் இரண்டு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. சங்கம் மூலம் வெற்றிலை விவசாயத்திற்கு தேவையான கொடிகள், நாணல் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.அறுவடை செய்யப்பட்ட வெற்றிலை சங்கங்கள் மூலமாக மதுரை,பரமக்குடி, ராமநாதபுரம், காரைக்குடி உள்ளிட்ட பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. வெற்றிலை விவசாயத்தை 5 முதல் 10 விவசாயிகள் இணைந்து கூட்டாகவே செய்கின்றனர். மூன்று முதல் ஐந்து லட்ச ரூபாய் வரை ஒரு ஏக்கருக்கு செலவு செய்கின்றனர். நடவு செய்த ஆறாவது மாதத்தில் இருந்து வெற்றிலை அறுவடை நடைபெறும் தொடர்ச்சியாக மூன்று ஆண்டு வரை வெற்றிலை அறுவடை செய்யலாம். இரண்டாயிரம் விவசாயிகள் இருந்த இடத்தில் தற்போது 100க்கும் குறைவான விவசாயிகளே வெற்றிலை சாகுபடி செய்கின்றனர்.விவசாயிகள் கூறுகையில்: வெற்றிலை விவசாயிகள் குத்தகைக்கு நிலம் வாங்கித் தான் வெற்றிலை பயிரிடுகின்றனர். காப்பீடு செய்தால் நில உரிமையாளருக்குதான் இழப்பீடு கிடைக்கும், குத்தகை ஒப்பந்தம்குறித்து எந்த விவசாயியும் எழுதி தருவதில்லை. மேலும் வெற்றிலை அழியும் பயிர் என கூறி அதிகாரிகள் காப்பீடு செய்வதற்கு முன் வருவதில்லை. வெற்றிலைக்கு மானியம், நோய் தாக்குதலுக்கு மருந்து கிடைப்பதில்லை.சோழவந்தான் பகுதியில் வெற்றிலை விவசாயமே குறைந்து விட்டது, திருப்புவனம் வட்டாரத்தில் தான் இன்னமும் வெற்றிலை விவசாயத்தை விடாமல் மேற்கொண்டு வருகிறோம், வெற்றிலை விவசாயத்திற்கு மாவட்ட நிர்வகம் உதவி செய்தால் வெற்றிலை சாகுபடி பரப்பளவு அதிகரிக்கும், என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி