சிவகங்கையில் 1512 பேருக்கு ரூ.24.24 கோடி நலத்திட்ட உதவி துணை முதல்வர் உதயநிதி வழங்கல்
சிவகங்கை:சிவகங்கையில் 1512 பயனாளிகளுக்கு ரூ.24.24 கோடிக்கான நலத்திட்ட உதவிகளை துணை முதல்வர் உதயநிதி வழங்கினார்.துணை முதல்வர் உதயநிதி நேற்று சிவகங்கை மாவட்டத்தில் கள ஆய்வில் ஈடுபட்டார். நேற்று காலை 10:30 மணிக்கு திருப்புவனம் வந்த அவருக்கு அமைச்சர் பெரியகருப்பன் தலைமையில் கட்சியினர் வரவேற்பு அளித்தனர். திருப்புவனம் அரசு மகளிர் மேல்நிலை பள்ளி முன் உதயநிதிக்கு, மாணவிகள் சாக்லெட் வழங்கி, பள்ளிக்கு விளையாட்டு திடல் ஏற்பாடு செய்ய வேண்டும் என மனு அளித்தனர். கானுாரில் ரூ.40.27 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் அணைக்கட்டு பணியை பார்வையிட்டார். இந்த அணைக்கட்டு மூலம் 19 கண்மாய்களை சேர்ந்த 6.975 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இதன் மூலம் 26 வருவாய் கிராமங்களை சேர்ந்த 18 ஊராட்சிகள் பயன்பெறும். ரூ.24.24 கோடி நலத்திட்ட உதவி
சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து துறை மாவட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தார். பின்னர், நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலெக்டர் ஆஷா அஜித் வரவேற்றார். அரசு செயலர் சஜீவனா, கூடுதல் தலைமை செயலாளர் பிரதீப் யாதவ், தேவகோட்டை சப் - கலெக்டர் ஆயுஷ் வெங்கட் வத்ஸ், எம்.எல்.ஏ.,க்கள் தமிழரசி, மாங்குடி பங்கேற்றனர். பல்வேறு துறைகள் சார்பில் 1512 பயனாளிக்கு ரூ.24.24 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள், ரூ.4.58 கோடியில் புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், புதிதாக ரூ.33.23 கோடியில் கட்டி முடித்த 36 புதிய கட்டடங்களை திறந்து வைத்தார். சிவகங்கை விளையாட்டு அரங்கில் ஆய்வு செய்து, மாணவர்களுடன் அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டார். மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபி நன்றி கூறினார்.