துர்நாற்றத்தில் மீன் மார்க்கெட்
காரைக்குடி: காரைக்குடி கழனி வாசல் வாரச்சந்தை அருகே 2020 ல் தேசிய மீன்வள வாரியம் சார்பில் ரூ.1 கோடி செலவில் மீன் மார்க்கெட் அமைக்கப்பட்டது. 60 கடைகளுடன் செயல்பட்டு வரும் மீன் மார்க்கெட்டில் மக்கள் மீன்களை வாங்கி வந்தனர். சிறப்பாக செயல்பட்ட மீன் மார்க்கெட் முறையான பராமரிப்பின்றி பாழாகி வருகிறது. கழிவு முறையாக அள்ளப் படாததோடு கால்வாய் அடைபட்டு கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. மீன் வாங்குமிடம், வெட்டுமிடும், நுழைவு வாயில் உட்பட பல சுகாதாரமின்றி துர்நாற்றம் அடிப்பதால் மீன் வாங்க வரும் பொதுமக்கள் மூக்கை பிடித்தவாறு வந்து செல்ல வேண்டி உள்ளது. வியாபாரிகள், பொது மக்கள் புகார் கூறியும் நடவடிக்கை எதுவும் இல்லை. சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.