காரைக்குடியில் தங்கக்கட்டி வழிப்பறி: கடை ஊழியர் கைது
காரைக்குடி:காரைக்குடியில் நகைக்கடை ஊழியரிடம் தங்கக் கட்டிகளை வழிப்பறி செய்த வழக்கில் அதே கடையில் பணி செய்தவரை போலீசார் கைது செய்தனர். மதுரை மாவட்டம் பழங்காநத்தத்தைச் சேர்ந்தவர் விஜயராஜா 42. இவர் மதுரை தெற்கு ஆவணி மூல வீதியில், உள்ள ஒரு நகைக்கடையில் வேலை செய்தார். ஆக., 4 இரவு காரைக்குடிக்கு ஒன்றரை கிலோ தங்க கட்டிகளுடன் பழைய பஸ் ஸ்டாண்டில் இறங்கி நடந்து சென்றார். இவரை பின் தொடர்ந்த சிலர் தங்களை கஸ்டம்ஸ் அதிகாரிகள் என்று கூறி காரில் கடத்திச் சென்று, தங்க கட்டிகளை பறித்து சென்றனர். ஏ.எஸ்.பி., ஆசிஷ் புனியா தலைமையில் தனிப்படை அமைத்து வழிப்பறி செய்தவர்களை போலீசார் தேடினர். இந்நிலையில் விஜயராஜாவுடன் அதே கடையில் வேலை செய்த மகாராஷ்டிராவை சேர்ந்த அபிமன்யூ என்ற மனோஜ் 38, என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விஜயராஜா காரைக்குடி செல்வதை அறிந்து, திட்டம் தீட்டி வட மாநிலத்தில் இருந்து தனது நண்பர்களை வரவழைத்து இச்சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. அபிமன்யூவை கைது செய்த போலீசார் தங்க கட்டிகளை எடுத்துச் சென்ற நபர்களை தேடி வருகின்றனர்.