திருப்பாசேத்தி சுங்கச்சாவடியில் நிறுத்தப்பட்ட அரசு பஸ்
திருப்பாச்சேத்தி : திருப்பாச்சேத்தி சுங்க சாவடியில் பாஸ்ட் டேக்கில்பணம் இல்லை என கூறி அரசு பஸ் நிறுத்தப்பட்டதால் பயணிகள் தவிப்பிற்குள்ளாகினர்.மதுரையில் இருந்து கமுதி, பரமக்குடி, ராமேஸ்வரம் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு அரசு பஸ்கள்இயக்கப்பட்டு வருகின்றன. திருப்பாச்சேத்தி சுங்கச்சாவடியை காரைக்குடி அரசு போக்குவரத்து கழக கோட்டத்தைச் சேர்ந்த 90 பேருந்துகள் கடந்து செல்கின்றன. ராமேஸ்வரம் கிளை பணிமனை மூலம் ராமேஸ்வரத்திலிருந்து மதுரைக்கு வழக்கமாக அரசு பஸ் இயக்கப்படுகிறது. மதுரையில் இருந்து நேற்று மாலை 4:10 மணிக்கு திருப்பாச்சேத்தி சுங்கச்சாவடி வந்த போது பாஸ்ட் டேக்கில் பணம் இல்லை என அனுமதிக்க மறுத்தனர். கடும் வெயில் நேரத்தில் பஸ் நிறுத்தப்பட்டதால் பயணிகள் தவித்தனர். 20 நிமிட போராட்டத்திற்கு பின் வேறு வழியின்றி உடனே ரீ சார்ஜ் செய்ய வேண்டும் என கூறி பஸ்சை அனுமதித்தனர்.இதனால் பயணிகள் சிரமத்திற்குள்ளாகினர்.ராமேஸ்வரம் கிளை மேலாளர் கூறுகையில், அரசு பஸ்களுக்கு முறையாக பாஸ்ட் டேக் ரீ சார்ஜ் செய்யப்படுகிறது. திருப்பாச்சேத்தி சுங்கச்சாவடியில் அனுமதிக்க மறுக்காமல் அடிக்கடி பிரச்னை ஏற்படுகிறது. இதனையடுத்த போகலூர் சுங்க சாவடியில் இந்த பிரச்னை கிடையாது. இந்த பஸ்சில் பாஸ்ட் டேக் கில் பணம் இருப்பு உள்ளது. இதுகுறித்து நாங்கள் சுங்கச்சாவடி நிர்வாகத்திடம் புகார் கூறியுள்ளோம், என்றனர்.