திருப்பாச்சேத்தியில் மழைக்கு வீடு சேதம்
திருப்பாச்சேத்தி : திருப்பாச்சேத்தி அருகே சலுப்பனோடை கிராமத்தில் நள்ளிரவில் பெய்த மழையால் வீடு இடிந்து விழுந்த நிலையில் தூங்கி கொண்டிருந்த முதிய தம்பதியினர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். திருப்புவனம், திருப்பாச்சேத்தி வட்டாரத்தில் கடந்த இரு நாட்களாக மழை பெய்து வருகிறது. பலத்த மழையாக இல்லாமல் தொடர்ச்சியாக சாரல் மழை பெய்து வருகிறது. திருப்பாச்சேத்தி அருகே சலுப்பனோடை கிராமத்தில் உடையார், வெள்ளையம்மாள் தம்பதியினர் ஓட்டு வீட்டில் வசித்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவில் மழை தொடர்ச்சியாக பெய்துள்ளது. அதிகாலை நான்கு மணிக்கு ஓட்டு வீட்டின் வடக்குப்பகுதி அப்படியே பெயர்ந்து வெளிப்புறமாக விழுந்து விட்டது. வீட்டின் பாதிப்பகுதி அப்படியே பெயர்ந்து விழுந்த நிலையில் சப்தம் கேட்டு முதிய தம்பதியினர் அலறியடித்து வீட்டை விட்டு வெளியேறி அருகில் இருந்தவர்கள் வீடுகளில் தஞ்சம் புகுந்தனர்.