கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்க நிலம் பத்திரப்பதிவு
திருப்புவனம்:சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் திறந்த வெளி அருங்காட்சியகம் அமைக்க விவசாயிகளிடம் இருந்து கையகப்படுத்தப்பட்ட நிலம் அரசு பெயரில் பத்திரப்பதிவு செய்யப்பட்டது.கீழடியில் தமிழகம் மற்றும் மத்திய தொல்லியல் துறைகள் அகழாய்வு செய்த இடங்கள் திறந்த வெளி அருங்காட்சியகமாக மாற்றப்பட உள்ளது. நில உரிமையாளர்கள் கதிரேசன், நீதியம்மாள், கார்த்திக் உட்பட 17 பேருக்கு சொந்தமான நான்கு ஏக்கர் 48 சென்ட் பரப்பளவு உள்ள இடம் கையகப்படுத்தப்பட்டது. நில உரிமையாளர்களுக்கு ரூ.8 கோடியே 20 லட்சம் இழப்பீடும் வழங்கப்பட்டுள்ளது.மூன்று மாதங்களுக்கும் மேலாக திறந்தவெளி அருங்காட்சியக பணிகள் கீழடி அகழாய்வு தள இயக்குனர் ரமேஷ், இணை இயக்குனர் அஜய் தலைமையில் நடக்கின்றன. நிலம் கையகப்படுத்தப்பட்டாலும் பத்திரம் அரசு சார்பில் பதிவு செய்யப்படவில்லை. நேற்று திருப்புவனம் சார்பதிவாளர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் விஜயகுமார் தலைமையில் நில அளவீடு அலுவலர் பெயரில் நான்கு ஏக்கர் 48 சென்ட் நிலம் பதிவு செய்யப்பட்டது. பத்திரப்பதிவின் போது தாசில்தார் விஜயகுமார், ஆர்.ஐ., காஞ்சனா, வி.ஏ.ஓ., பிரபு உள்ளிட்டோர் உடன் இருந்தனர். சில மாதங்கள் கழித்து தமிழக அரசின் உத்தரவுப்படி நிலம் தொல்லியல் துறைக்கு மாற்றம் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். தொல்லியல் துறைக்காக நிலம் வாங்கப்பட்டாலும் நேற்று பத்திரம் பதிவு செய்யும் போது தொல்லியல் துறை அதிகாரிகள் பங்கேற்கவில்லை.