பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயிலை மானாமதுரை வரை நீட்டிக்கவும் பயணிகள் வேண்டுகோள்
சிவகங்கை,: பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயிலை மானாமதுரை வரை நீட்டிக்கும் திட்டத்தை தெற்கு ரயில்வே நிர்வாகம் செயல்படுத்த வேண்டும் என பயணிகள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.மாவட்ட தலைநகரான சிவகங்கை வழியாக ராமேஸ்வரத்தில் இருந்து வடமாநிலங்களுக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன.அதே போன்று எர்ணாகுளத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில் இயக்குகின்றனர். இது போன்று எக்ஸ்பிரஸ் ரயில்களை ராமேஸ்வரத்தில் இருந்து இயக்குவதின் மூலம் தென்மாவட்ட பயணிகள் பெரிதும் பயன் அடைந்து வருகின்றனர்.அதே நேரம் தற்போது சென்னையில் இருந்து காரைக்குடி வரை மட்டுமே இயக்கப்படும் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயிலை மானாமதுரை வரை நீட்டிக்கும் கோரிக்கையை தெற்கு ரயில்வே நிர்வாகம் கண்டு கொள்ளவே இல்லை.அதே போன்று திருச்சி மற்றும் மன்னார்குடி - காரைக்குடி இடையே இயங்கும் ரயில்களை மானாமதுரை வரை நீட்டிக்கும் கோரிக்கையும் கிடப்பில் உள்ளது. தாம்பரம் -- செங்கோட்டை இடையே ஓடும் ரயிலை சிவகங்கை, மானாமதுரையில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.எர்ணாகுளம் - வேளாங்கண்ணி இடையே பயணிகளிடம் நல்ல வரவேற்பைபெற்றுள்ள ரயிலை சிவகங்கையில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். பகல் நேரத்தில் சென்னைக்கு ரயில்களை இயக்க வேண்டும் என பயணிகள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.