மானாமதுரை வைகை ஆற்றில் 24 மணி நேரமும் மணல் கடத்தல்
மானாமதுரை: மானாமதுரை வைகை ஆற்றில் 24 மணி நேரமும் தலைச்சுமையாக மணல் கடத்தப்பட்டு வருவதை வருவாய்த் துறையினர் மற்றும் போலீசார் கண்டுகொள்வதில்லை. மானாமதுரை நகர்ப் பகுதியில் வைகை ஆறு குறுக்கே சென்று வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு வைகை ஆற்றில் தொடர்ந்து தண்ணீர் சென்றதன் காரணமாக வைகை ஆற்றில் மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் கோயில் எதிர்புறம் ஆங்காங்கே மணல் திட்டுகள் உருவாகி உள்ளன. ஏராளமான பெண்கள் தனித்தனி குழுக்களாக சேர்ந்து காலை முதல் இரவு வரை சாக்கு மூடைகளில் மணலை அள்ளி தலைச் சுமையாக கடத்தி வருகின்றனர். இவ்வாறு கொண்டு செல்லப்படும் மணலை வைகை ஆற்றங்கரையோரம் வீடு கட்டுபவர்களுக்கு ஒரு மூடை ரூ.50லிருந்து ரூ.100 வரை விற்பனை செய்து வருகின்றனர். ஆகவே வருவாய்த்துறை மற்றும் போலீசார் மணல் திருட்டில் ஈடுபடும் பெண்கள் மற்றும் திருட்டு மணலை வாங்கி வீடுகளை கட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.