| ADDED : செப் 15, 2011 09:19 PM
சிவகங்கை : ''பரமக்குடி கலவரத்தில் காயமுற்று சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவருபவர்களுக்கு முறையான சிகிச்சை வழங்கப்பட்டதா,'' என, நீதிபதி சோலைமலை நேற்று ஆய்வு செய்தார். பரமக்குடியில் நடந்த இமானுவேல் சேகரன் நினைவு தின ஊர்வலத்திற்கு வந்தவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே பரமக்குடி ஐந்து முனை ரோட்டில் மோதல் ஏற்பட்டது. இதை தொடர்ந்து இளையான்குடியில் கலவரம் ஏற்பட்டது. இதில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். கலவரக்காரர்கள் கற்களை கொண்டு தாக்கியதில், போலீசார் உட்பட பலர் காயமுற்றனர். அவர்களில் சிலர் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை, இளையான்குடி, திருப்புவனம், சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை என மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். ஐகோர்ட் உத்தரவுபடி, நேற்று சிவகங்கை மாவட்ட செஷன்ஸ் நீதிபதி சோலைமலை, கலெக்டர் ராஜாராமன், இணை இயக்குனர் (மருத்துவம்) ரஞ்சனி தேவி ஆகியோர் ஆய்வு நடத்தினர்.ஆய்வில், காயமடைந்தவர்கள் விபரம், அவர்களுக்கு எந்தவகையில் சிகிச்சை அளிக்கப்பட்டது போன்ற விபரத்தை சேகரித்து சென்றனர்.