கோடை வெயில் ஆரம்பம் மண் கூஜாக்கள் விற்பனை
மானாமதுரை : வெயில் கடந்த சில நாட்களாக கடுமையாக அடித்து வருவதை தொடர்ந்து மானா மதுரையில் மண் கூஜாக்கள் தயாரிப்பு மற்றும் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது. சிவகங்கை மாவட்டம் மானா மதுரையில் 300க்கும் மேற்பட்ட மண்பாண்ட தொழிலாளர்கள் வருடம் தோறும் சீசனுக்கு தகுந்தாற்போல் மண்பாண்ட பொருட்களை தயார் செய்து வருகின்றனர்.தற்போது மழைக்காலம் முடிந்து கோடை காலம் ஆரம்பித்துள்ள நிலையில் இரவு நேரங்களில் குளிர் அதிகமாக இருந்தாலும் பகல் நேரத்தில் கடுமையான வெயில் அடித்து வருவதால் இயற்கையான முறையில் தண்ணீரை குளிர வைக்கும் மண் கூஜாக்களை பலர் ஆர்வமுடன் வாங்கி சென்று வருகின்றனர்.திருச்சி மண்பாண்ட வியாபாரி கண்ணன் கூறியதாவது: தமிழகத்தில் மானாமதுரை பகுதியில் தயாரிக்கப்படும் மண்பாண்ட பொருள்களுக்கு தனி மவுசு உள்ளது.தற்போது கோடை ஆரம்பித்துள்ள நிலையில் ஏராளமானோர் மண் கூஜாக்கள் மற்றும் மண் பானைகளை பயன்படுத்த துவங்கியுள்ளதால் மொத்தமாக வாங்க மானாமதுரைக்கு வந்துள்ளேன் என்றார்.