பராமரிப்பில்லாத சிவகங்கை அம்மா உடற்பயிற்சி கூடம்
சிவகங்கை: சிவகங்கையில் ரூ.30 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட அம்மா பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடம் பராமரிப்பு இல்லாமல் திட்டத்திற்கு அரசு செலவழித்த பணம் வீணாகிருப்பதாக இளைஞர்கள் தெரிவிக்கின்றனர்.சிவகங்கை மாவட்ட ஊரக வளர்ச்சி திட்டத்தில்5 ஊராட்சிகளில் அம்மா பூங்கா அமைக்கப்பட்டுஉள்ளது. சிவகங்கை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை அருகே வாணிங்குடி ஊராட்சியில் உள்ள அம்மா உடற்பயிற்சிகூடம் ரூ.30 லட்சம் செலவில் நவீன முறையில் அமைக்கப்பட்டது. பூங்காவில் சிறுவர்களுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த விளையாட்டு உபகரணங்களும், உடற்பயிற்சி கூடத்தில் நவீன உடற்பயிற்சி சாதனங்களும் உள்ளன. இவை அனைத்தும் நீண்ட நாட்களாக பராமரிப்பு இல்லாததால் வீணாகி விட்டது. மாவட்ட நிர்வாகம் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை அருகே உள்ள இந்த உடற்பயிற்சி கூடத்தை பராமரித்து திறந்து வைத்தால் வாணிங்குடி ஊராட்சியில் உள்ள பொதுமக்கள், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் உறவினர்கள், நடைபயிற்சி செய்யும் முதியோர்கள் உடற்பயிற்சி செய்யும் இளைஞர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.