உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தஞ்சாவூர் / விலை உயர்வு அறிவிப்பால் கள்ள சந்தையில் விற்க கடத்தி வரப்பட்ட 1,360 மதுபாட்டில்கள்: மூவர் கைது

விலை உயர்வு அறிவிப்பால் கள்ள சந்தையில் விற்க கடத்தி வரப்பட்ட 1,360 மதுபாட்டில்கள்: மூவர் கைது

தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே கூடநாணல் பகுதியில், நேற்று முன்தினம் இரவு, திருக்காட்டுப்பள்ளி சப் - இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் உள்ளிட்ட போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகத்துக்கு இடமாக 'டாடா சுமோ' கார் ஒன்று நின்றுக்கொண்டிருந்தது. அந்த வாகனத்தின் அருகே போலீசார் சென்ற போது, வாகனத்தில் இருந்து ஒருவர் தப்பியோடினார். அப்போது தப்பியோட முயன்ற மூவரை போலீசார் மடக்கி பிடித்தனர். மேலும், வாகனத்தை சோதனை செய்த போது, அதில், 1,360 பிராந்தி பாட்டில்கள் எவ்வித உரிமமும் இன்றியும், அரசு அனுமதியின்றியும் விற்பனைக்காக திருச்சி பகுதிகளில் இருந்து ஏற்றி வந்தது தெரிந்தது. உடன், பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.திருக்காட்டுப்பள்ளி போலீசார், அவர்கள் மூவரையும் கைது செய்து விசாரித்தனர். விசாரணையில், திருவையாறு அருகே மேலதிருப்பந்துருத்தியை சேர்ந்த அன்புச்செல்வன் மகன் லோகேஸ்வரன், 27, குணசீலன் மகன் பாலமுருகன், 27, நடுக்காவேரி கலியராஜ் மகன் வெற்றிச்செல்வன், 43, எனவும், தப்பியோடியது நடுக்காவேரிவை சேர்ந்த காளிராஜ் மகன் வேல்முருகன்,42, என்பதும் தெரியவந்தது.தமிழகத்தில் இன்று, 1ம் தேதி டாஸ்மாக்கில் மதுபான விலை உயர்வதாக அரசு அறிவித்துள்ளதால், கள்ள சந்தையில் விற்பனை செய்வதற்காக போலியாக தயார் செய்யப்பட்ட மதுபாட்டில்கள் கடத்தி வரப்பட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.பறிமுதல் செய்த மதுபாட்டில்களை கலெக்டர் தீபக் ஜேக்கப், எஸ்.பி., ஆஷிஷ் ராவத், திருவையாறு டி.எஸ்.பி., ராமதாஸ், திருக்காட்டுப்பள்ளி பொறுப்பு இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் ஆகியோர் பார்வையிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை