பெரிய கோவில் வடிவமைப்பில் தஞ்சை ஸ்டேஷன் நுழைவாயில்
தஞ்சாவூர்: தஞ்சாவூர் ரயில்வே ஸ்டேஷன், இரண்டாவது நுழைவாயிலில், பெரிய கோவில் வடிவமைப்பில் அமைய உள்ளது. அம்ரித் பாரத் திட்டத்தில், 2023, ஆக., 6ல் நாடு முழுதும், 508 ரயில்வே ஸ்டேஷன்களில், மேம்பாட்டு பணி தொடங்கப்பட்டது. இதில், தஞ்சாவூர் ரயில்வே ஸ்டேஷனில், 21.17 கோடி ரூபாய் மதிப்பில் பணி நடந்து வருகிறது. ரயில்வே ஸ்டேஷன் முகப்பில் இருந்த பெரியகோவில் மாதிரி வடிவம், புதுப்பிக்கும் பணியின்போது இடித்து அகற்றப்பட்டு, வடமாநிலத்தில் உள்ள கோவில் போல வடிவமைப்பு மாற்றப்பட்டது. இதற்கு சமூக ஆர்வலர்கள், ரயில் பயணியர் சங்கத்தினர், அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து போராடினர். ரயில்வே உயர் அதிகாரிகளிடம் மனு அளித்தனர். ரயில்வே அதிகாரிகள், போராட்ட குழுவினரிடம், ஏற்கனவே ஒரு நுழைவாயில் மட்டுமே இருந்தது. தற்போது, இரண்டாவது நுழைவாயில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த நுழைவாயில், பெரியகோவில் வடிவமைப்பில் அமைக்கப்பட உள்ளது என, தெரிவித்துள்ளனர்.