சொந்த செலவில் சாலைகளை அகலப்படுத்திய கிராம மக்கள்
தஞ்சாவூர்:பேராவூரணி அருகே, போக்குவரத்து வசதிக்காக, கிராம மக்களே நிதி திரட்டி, பாலங்களை அகலப்படுத்தி, சாலையை சீரமைத்தனர். தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே கிழக்கு புனல்வாசல், வாடிக்காடு, ராமகிருஷ்ணபுரம் ஆகிய கிராமங்களை சேர்ந்தவர்கள், 5 கி.மீ., நடந்து சென்று, அறந்தாங்கி பிரதான சாலையில் தான் பஸ் ஏறி வெளியூர்களுக்கு சென்று வந்தனர். கிராமங்களுக்கு பஸ் இயக்க வேண்டும் எனக்கோரி, கடந்த ஜூலை மாதம், பேராவூரணி தி.மு.க., - எம்.எல்.ஏ., அசோக்குமாரை சந்தித்து மனு அளித்தனர். போக்குவரத்துத்துறை அதிகாரிகள் ஆய்வில், 'நான்கு இடங்களில் சிறிய பாலம் அமைக்க வேண்டும்; சாலை ஓரத்தில் உள்ள புதர் செடிகளை அகற்றினால் பஸ் இயக்க முடியும்' என்றனர். இதையடுத்து, கிராம மக்கள், வாட்ஸாப் குழு ஒன்றை உருவாக்கி, 4.50 லட்சம் ரூபாய் திரட்டி, நான்கு இடங்களில் குறுகலாக இருந்த பாலங்களை, அகலமாக்கி, சாலையோரங்களில் இருந்த மரம், செடிகளை அகற்றி, பாலங்களை மாற்றி அமைத்துள்ளனர். பஸ் வரும் நாளை எதிர்பார்த்து காத்திருப்பதாக கூறினர்.