| ADDED : மே 05, 2024 03:35 AM
தேனி, : தேனியில் 29 சென்ட் இடத்தை ஆவணங்களை மாற்றி மோசடி செய்து விற்றதாக கோடங்கிபட்டியை சேர்ந்த முருகன், சத்திரபட்டி பரமசிவன், அரண்மனைப்புதுார் ராஜேஷ்வரபாண்டியன், பழனிசெட்டிபட்டி பிரின்ஸ், ஆண்டிச்சாமி ஆகியோர் மீது மாவட்ட குற்றபிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.வீரபாண்டி மாரியம்மன்கோயில்பட்டி லோகிநாதன், இவரது தம்பி கணேசன். இவர்களுக்கு சொந்தமாக 29சென்ட் நிலம் இருந்தது. இதனை லோகிநாதன் மகன் சுரேஷ், கணேசன் மகள் மேனகா இடத்தை சரிபாதியாக பிரித்து கொண்டனர். ஆனால் இடத்தை குறைந்த விலைக்கு கேட்டு பிரின்ஸ், ஆண்டிச்சாமி தொந்தரவு செய்தனர். இதனால் சுரேஷ், மேனகா இணைந்து பரமசிவம், ராஜேஸ்வர பாண்டியன் பெயரில் பவர் பத்திரம் எழுதி கொடுத்தனர். அதன் அசல் ஆவணத்தை சுரேஷ் வைத்திருந்தார். இந்நிலையில் 29 சென்ட் நிலத்தை முருகன் உள்ளிட்ட 5பேர் சுத்தம் செய்தனர். ஏன் சுத்தம் செய்கிறீர்கள் என சுரேஷ் கேட்டார். அதற்கு பரமசிவம், ராஜேஸ்வர பாண்டியனிடம் இருந்து இடத்தை கிரையம் பெற்றுள்ளதாக கூறி முருகன் கொலைமிரட்டல் விடுத்தார். சுரேஷ் தேனி சார்பதிவாளர் அலுவலகத்தில் சென்று பார்த்த போது பரமசிவம், ராஜேஸ்வர பாண்டியன் மற்றவர்கள் இணைந்து முருகன் பெயரில் பத்திரம் பதிவு செய்து கொடுத்தது தெரியவந்தது.29 சென்ட் நிலத்தை மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சுரேஷ் தேனி எஸ்.பி., அலுவலகத்தில் புகார் அளித்தார்.எஸ்.பி., சிவபிரசாத் உத்தரவில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் முருகன், பரமசிவன், ராஜேஸ்வர பாண்டியன், பிரின்ஸ், ஆண்டிச்சாமி ஆகியோர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.