டோலிக்கு அதிக கட்டணம் 4 தொழிலாளிகள் கைது
சபரிமலை: கூடுதல் பணம் தர மறுத்த பக்தரை டோலியில் இருந்து இறக்கி விட்ட 4 தொழிலாளர்களை பம்பை போலீசார் கைது செய்தனர்.சபரிமலை ஐயப்பனை தரிசிக்க வரும் வயது முதிர்ந்த மற்றும் நடக்க முடியாத பக்தர்களை டோலியில் தொழிலாளர்கள் தூக்கி செல்கின்றனர். பிரம்பு நாற்காலியில் இரு மூங்கில்களை கட்டி 4 பேராக தூக்கி செல்வர். பம்பையில் இருந்து சன்னிதானம் செல்ல ரூ.3250 கட்டணமாகும். சன்னிதானத்தில் தரிசனம் முடித்து திரும்ப பம்பை வர வேண்டுமெனில் ரூ.6,500 கட்டணம் என தேவசம்போர்டு நிர்ணயித்துள்ளது.ஆனால் டோலி தூக்கும் தொழிலாளர்கள் பக்தர்களிடம் இருந்து அதிக பணம் வசூலிப்பது வாடிக்கையாக உள்ளது. இது தொடர்பாக தொடர்ந்து தேவசம்போர்டு ஒலிபெருக்கியில் அறிவிப்பு வெளியிட்டாலும் தொழிலாளர்கள் அதை கண்டு கொள்வதில்லை.நேற்று முன்தினம் அதிகாலையில் பம்பையில் இருந்து ஒரு பக்தரை சுமந்து வந்த டோலி தொழிலாளர்கள் தேவசம்போர்டு நிர்ணயித்ததை விட அதிக கட்டணம் கேட்டுள்ளனர். ஆனால் அந்த பக்தர் தர மறுத்ததால் நீலிமலை ஏற்றத்தில் அவரை இறக்கி விட்டனர். இதுகுறித்து அந்த பக்தர் அங்கிருந்த போலீசாரிடம் விபரத்தை கூறினார்.இதையடுத்து கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் குமுளி அருகே செங்கரையைச் சேர்ந்த எஸ்டேட் தொழிலாளிகளான செல்வம் 56, விபின் 37, செந்தில்குமார் 37, பிரசாத் 33, கைது செய்யப்பட்டனர். டோலி சுமப்பதற்காக தேவசம்போர்டு வழங்கியிருந்த அடையாள அட்டையை ரத்து செய்யவும் போலீசார் தேவசம்போர்டுக்கு பரிந்துரைத்தனர்.