அவசரகதியில் அரை குறையாக திறக்கப்பட்ட சர்வீஸ் ரோடு அசம்பாவிதத்திற்கு முன் நடவடிக்கை தேவை
தேனி: தேனியில் ரயில்வே மேம்பால பணிகள் ஆமை வேகத்தில்நடந்து வருகிறது. இந்நிலையில் அவசர கதியில் சர்வீஸ் ரோட்டினை அதிகாரிகள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளனர். இதனால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.தேனி நகர்பகுதியில் தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் அரண்மனைப்புதுார் விலக்கு முதல் மதுரை ரோட்டில் உள்ள தனியார் பள்ளி வரை ரயில்வே மேம்பால பணிகள் நடந்து வருகிறது. இரு ஆண்டுகளுக்கு முன் துவங்கிய பணி இதுவரை 50 சதவீதம் கூட நிறைவடைய வில்லை. இதற்காக வேளாண் பொறியியல் துறை அலுவலகம் முதல் அரசு ஐ.டி.ஐ., வரை ஜூலை 19 முதல் போக்குவரத்து தடை செய்யப்பட்டது.இந்நிலையில் அவசர கதியில் ' மெட்டல் ரோடு' போன்று ஜல்லி கற்களை மட்டும் கொட்டி போக்குவரத்திற்காக சர்வீஸ்ரோடு திறக்கப்பட்டது. இந்த ரோட்டில் அதிக அளவில் துாசி பறந்ததால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளானார்கள். இதனை தார் ரோடாக மாற்றி பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். மேம்பால பணிகளை விரைந்து முடிக்க தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.